வரும் மே மாதம் 11ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை மணிப்பூர் மாநிலம் இம்பாலில் 12 ஆவது தேசிய அளவிலான சப் - ஜூனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன் ஷிப் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொள்ள கடந்த 9 ஆம் தேதி சென்னையில் வீராங்கனைகள் தேர்வு நடைபெற்றது. இதில் 116 பேர் கலந்து கொண்ட நிலையில் 23 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட வீராங்கனைகளுக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல்வெளி மைதானத்தில் கடந்த 17ஆம் தேதி முதல் பயிற்சி முகாம் தொடங்கி உள்ளது. இந்த பயிற்சி முகாம் வரும் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.




இதில் இருந்து 18 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு இம்பாலில் நடைபெறும் தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாட உள்ளனர். இந்த 23 பேர் கொண்ட பயிற்சி முகாம் குழுவில் கோவில்பட்டியை சேர்ந்த முன்மண்ஜா, மகாலெட்சுமி, மனிஷா என 3 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு அன்பு மற்றும் ரஸ்னா ஆகியோர் பயிற்சியாளராக செயல்பட்டு பயிற்சி அளித்து வருகின்றனர். காலை, மாலை என இருவேளையும் வீராங்கனைகளுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் வேல்ஸ் வித்யாலயா சார்பில் வீராங்கனைகள் பயிற்சிக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.




கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய அளவிலான சீனியர் ஹாக்கி அணி போட்டியில் தமிழகம் அணி 22 ஆண்டுகளுக்கு பின்னர் வெள்ளி பதக்கம் வென்ற நிலையில் அடுத்து வரும் சப் -ஜூனியர் போட்டியில் மகளிர் ஹாக்கி அணி வீராங்கனைகள் சாதனை நிகழ்த்துவர்கள் அனைவரும் எதிர்பார்க்க வைத்துள்ளனர். இதனால் வீராங்கனைகள் உத்வேகத்துடன் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை நடைபெற்றுள்ள தேசிய அளவிலான சப் -ஜூனியர் போட்டியில் மகளிர் ஹாக்கி அணி 3 ஆவது இடத்தினை பிடித்துள்ளது. ஆனால் இம்முறை சாதிக்க வேண்டும், இறுதி போட்டி வரை சென்று வென்று சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இளம் வீராங்கனைகள் தங்களது பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.




இந்நிலையில் பயிற்சி பெறும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், பயிற்சி பெறும் வீராங்கனைகளை நேரில் சந்தித்து அவர்கள் பெற்று வரும் பயிற்சிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைக்க தனது வாழ்த்துக்களை தெரிவித்தது மட்டுமின்றி தன்னம்பிக்கையுடன் பயிற்சி பெற்று சாதிக்க வேண்டும்  என்று கேட்டுக்கொண்டார்.




தொடர்ந்து வீராங்கனைகளுடன் குழு புகைப்படமும் எடுத்து கொண்டார். இதை அடுத்து செயற்கை புல்வெளி மைதானத்துடன் இணைந்துள்ள விளையாட்டு மாணவர் விடுதிக்கு தேவைப்படும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். குடிநீர் வசதி, மின்சார வசதி மற்றும் விளையாட்டு மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு கட்டில் வசதி செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மைதானம் மற்றும் மாணவர் விடுதிக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.