முன்னாள் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவை விவகாரத்து செய்ததாக வெளியான தகவல் குறித்து அவரது கணவரும், பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயப் மாலிக் கருத்து தெரிவித்துள்ளார். 


கடந்த 2010 ஆம் அண்டு ஹைதராபாத்தில், 5 மாதங்கள் காதலித்த நிலையில், முன்னாள் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா  மிர்ஸா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயப் மாலிக்கை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு இஷான் மிர்சா மாலிக் என்ற மகன் பிறந்தான். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் கடந்த சில மாதங்களாகவே சர்ச்சைகள் வெடித்துள்ளது. 


குறிப்பாக சானியா மிர்சாவுக்கு சோயப் மாலிக் துரோகம் செய்து விட்டதாகவும், அவர் பாகிஸ்தானின் பிரபல யூட்யூபர் ஆயிஷா உமருடன் மாலிக் கொண்டிருந்த தொடர்பு சானியாவுக்கு தெரிய வந்ததே இதற்கு காரணமாக கூறப்பட்டது. இதனை சோயப் மாலிக் - ஆயிஷா இருவருமே உறுதிப்படுத்தாத நிலையில், சானியா கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் தான் வசித்து வருகிறார். இதனால் இருவரும் விவாகரத்து செய்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்களில் தகவல் வெளியானது. 






அதேசமயம் ஷோயப் மாலிக் என்னுடைய நல்ல நண்பர். நாங்கள் ஒருவருக்கொருவர் நல்லதை மட்டுமே விரும்புகிறோம் என ஆயிஷாவும் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கிடையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக சானியா மிர்சா பதிவிட்ட சமூக வலைத்தளப்பதிவு ஒன்று ரசிகர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. ஒரு பதிவில், உடைந்த இதயங்கள் எங்கு செல்கிறது..அல்லாவை காண என்றும், மற்றொரு பதிவில் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு  இந்த தருணம் என்னை கடினமான நாட்களுக்குள் கொண்டு செல்கிறது என தெரிவித்ததால் ரசிகர்கள் என்ன நடக்கிறது என தெரியாமல் குழப்பமடைந்தனர். 


இந்நிலையில் சானியா மிர்சாவுடனான விவாகரத்து சர்ச்சை குறித்து சோயப் மாலிக் முதல்முறையாக மவுனம் கலைத்துள்ளார். அதில் The Mirza Malik Show என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், ‘இது எங்கள் தனிப்பட்ட விஷயம். இந்தக் கேள்விக்கு நானோ, என் மனைவியோ பதில் சொல்லமாட்டோம். அதை அப்படியே விடுங்கள்’ என  தெரிவித்துள்ளார். இதன்மூலம் சானியா மிர்சா - சோயப் மாலிக் விவாகரத்து செய்தி உறுதி தான் போல என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.