ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இந்தியாவில் முதல் முறையாக நடத்தபடுகிறது. 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் மைதானத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சிறப்பு ஏற்பாட்டில் மிகவும் பிரமாண்டமாக தொடங்கியது. இந்த தொடரில் நடப்புச் சாம்பியன் சௌத் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா மற்றும் மலேசியா அணிகள் களமிறங்கின. 


போட்டி அட்டவணைப் படி ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதியது. அதில் இந்தியா, மலேசியா, சௌத் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதிக்கு முதலில் இந்தியா மற்றும் மலேசியா  அணிகள் தகுதி பெற்றன. அடுத்த இரண்டு அணிகள் எவை எவை என்பதை நேற்று அதாவது ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற போட்டிகளின் முடிவுகளை வைத்து முடிவு  செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற அடுத்த இரண்டு அணிகளாக சௌத் கொரியாவும் ஜப்பானும் தகுதி பெற்றன. 


இதில் இன்று அதாவது ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி 5வது இடத்துக்கான போட்டி பாகிஸ்தான் மற்றும் சீனா அணிகளுக்கு இடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதையடுத்து நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் மலேசியா மற்றும் சௌத் கொரியா அணிகள் மோதின. போட்டி துவங்கிய நொடியில் இருந்து பரபரப்பு தொற்றிக்கொண்டது. 




போட்டியின் இரண்டாவது நிமிடம் தொடங்கியதும், சௌத் கொரியா அணி தனது முதல் கோலை அடித்தது. அடுத்த நிமிடத்தில் மலேசியா அணி கோல் அடிக்க, போட்டியில் பரபரப்பு உச்சத்த்தைத் தொட்டது. இதைத் தொடர்ந்து மலேசியா அணி தனது இரண்டாவது கோலை அடிக்க, அடுத்த சில நிமிடங்களில் கொரியா அணி இரண்டாவது கோலை அடித்தது. இதன் மூலம் போட்டி முதல் சுற்றில் இரு அணிகளும் தலா 2 கோல்களும் அடித்தது. 


அதன் பின்னர் இரண்டாவது சுற்றில் மலேசிய அணியே ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாவது சுற்றில் மலேசிய அணி தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றியது மட்டும் இல்லாமல், மற்றொரு கோலும் அடித்தது. இதனால் மலேசிய அணி போட்டியின் டிரைவர் சீட்டில் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டது. கொரிய அணி தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்ற முயற்சி செய்து அதில் தோல்வியைத் தழுவியது. இரண்டாவது சுற்று முடிவில் மலேசிய அணி 4 கோல்கள் அடித்தும் கொரிய அணி 2 கோல்கள் அடித்தும் இருந்தது. 




மூன்றாவது சுற்றில் இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சி செய்தன ஆனால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆனால் கொரிய அணி தனக்கு கிடைத்த ஷூட்-அவுட் முறையினை தவறவிட, மலேசிய அணிக்கு சாதகமாக அமைந்தது. நான்காவது சுற்று துவக்கத்தில் மலேசிய அணி அடுத்தடுத்து இரண்டு கோல்கள் போட அப்போதே மலேசிய அணியின் வெற்றி உறுதியானது. இறுதியில் மலேசிய அணி சௌத் கொரியா அணியை 6-2 என்ற கணக்கில் வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் சௌத் கொரியா அணி தோல்வி அடைந்ததால், இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் தோல்வி அடையும் அணியுடன் மூன்றாவது இடத்திற்கு போட்டியிடும்.