ஜப்பானின் கோபியில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதல் T63 போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று அசத்தியுள்ளார். 


உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்:


ஜப்பானில் உள்ள கோபி நகரில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நடப்பு பாராலிம்பிக் சாம்பியனான சுமித் ஆன்டில், ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் T64 பிரிவில் தனது உலகப் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.


அமெரிக்கர்களின் சாதனை முறியடிப்பு:


அதேபோல் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு ஜப்பானின் கோபியில் நடந்து வரும் 2024 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ரியோ பாரா ஒலிம்பிக் சாம்பியனான மாரியப்பன் தங்கவேலு (T63 பிரிவு) சீசனில் 1.88 மீட்டர் பாய்ந்து தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார்.


முன்னதாக அமெரிக்காவைச் சேர்ந்த எஸ்ரா ஃப்ரீச் (1.85 மீ) மற்றும் சாம் க்ரூ (1.82 மீ) ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார். மற்ற இரண்டு இந்திய வீரர்களான வருண் பாடி மற்றும் ராம்சிங்பாய் படியார் ஆகியோர் முறையே 4 மற்றும் 7வது இடங்களைப் பிடித்துள்ளனர். 


முதலமைச்சர் வாழ்த்து:


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாரியப்பன் தங்கவேலுவை வாழ்த்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “புகழுக்கு ஒரு மகத்தான பாய்ச்சல்! ஜப்பானின் கோபியில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதலில் டி63 போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்துகள். வருங்காலத்தில் இன்னும் பெரிய உயரங்களை எட்டுவோம்!" என்று கூறியுள்ளார்.


தமிழக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ ஜப்பானின் கோபியில் நடைபெற்று வரும் WorldParaAthletics Championships s சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம்  வென்றுள்ளார்.





 நமது மாரியப்பன் தங்கவேலு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்” என்று கூறியுள்ளார்.