டோக்கியோ ஒலிம்பிக் 25 மீட்டர் மகளிர் துப்பாக்கிச்சுடுதலில் ரெபிட் மற்றும் பிரிசிஷன் என்ற இரண்டு தகுதிச் சுற்றுகள் உள்ளன. இந்தப் பிரிவு போட்டியில் இந்தியா சார்பில் மனு பாக்கர் மற்றும் ராஹி சர்னோபட் ஆகியோர் பங்கேற்றனர். இன்று பிரிசிஷன் பிரிவு தகுதிச் சுற்று நடைபெற்றது.  முதலில் இந்தியாவின் ராஹி சர்னோபட் பங்கேற்றார். அதில் முதல் சீரிஸில் மொத்தமாக 96 புள்ளிகள் பெற்றார். அதன்பின்னர் இரண்டாவது சீரிஸில் 97 புள்ளிகள் பெற்றார். மூன்றாவது மற்றும் கடைசி சீரிஸில் 94 புள்ளிகள் பெற்றார். மொத்தமாக பிரிசிஷன் தகுதிச் சுற்றில்  ராஹி சர்னோபட்  287 புள்ளிகள் எடுத்தார். 


அதன்பின்னர் இந்தியாவின் மனு பாக்கர் முதல் சீரிஸில் 97 புள்ளிகள் பெற்றார். இரண்டாவது சீரிஸில் 97  புள்ளிகள் எடுத்தார். கடைசி மற்றும் மூன்றாவது சீரிஸில் மனு 98 புள்ளிகள் பெற்றார். பிரிசிஷன் தகுதிச் சுற்றில் மனு பாக்கர் மொத்தமாக  292 புள்ளிகள் எடுத்தார்.  பிரிசிஷன் தகுதிச் சுற்றின் முடிவில் இந்தியாவின் ராஹி சர்னோபட் 25ஆவது  இடத்திலும், மனு பாக்கர் 5ஆவது இடத்திலும் உள்ளனர். நாளை இந்தப் பிரிவில் ரெபிட் தகுதிச் சுற்று நடைபெறும். இந்த இரண்டிலும் எடுக்கும் புள்ளிகளை வைத்து முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள். இறுதிப் போட்டி நாளை மதியம் நடைபெறும். 


 






முன்னதாக ஆடவர் மற்றும் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மற்றும் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் ஆகிய இரண்டு போட்டிகளிலும் இந்தியாவிற்கு பெரிய ஏமாற்றமே அமைந்தது. இந்த இரண்டு பிரிவிலும் இந்திய வீரர் வீராங்கனைகள் யாரும் பதக்கம் வெல்லவில்லை. சவுரப் சௌதரி மட்டும் ஆடவர் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி ஆறுதல் அளித்தார். அதன்பின்னர் நடைபெற்ற கலப்பு பிரிவிலும் இந்திய ஜோடிகள் யாரும் பதக்கம் வெல்லவில்லை. மனு பாக்கர் மற்றும் சவுரப் சௌதரி மற்றும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் இரண்டாவது தகுதிச் சுற்றுக்கு முன்னேறினார்கள். அவர்களும் இறுதியில் 7ஆவது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்த்த 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைஃபிள் போட்டிகளில் இந்தியாவிற்கு பதக்கம் எதுவும் கிடைக்காதது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க: ஒலிம்பிக் டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் குத்துச்சண்டை : சதீஷ்குமார் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி !