ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்புகள் உள்ள போட்டிகளில் ஹாக்கியும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒலிம்பிக்கில் தொடக்கம் முதலே இந்திய ஹாக்கி அணி சிறப்பாக ஆடி வருகிறது.


ரோகித் தாஸ்க்கு தடை:


இந்த நிலையில், இந்திய ஹாக்கி அணி காலிறுதியில் அபாரமாக ஆடி பிரிட்டன் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் இந்திய வீரர் ரோகித்தாஸுக்கு ரெட் கார்ட்டு ஆட்டத்தின் நடுவரால் காட்டப்பட்டதால் அவரால் தொடர்ந்து ஆட முடியாத சூழல் ஏற்பட்டது. இருப்பினும் 10 வீரர்களுடன் ஆடிய இந்திய அணி அபார வெற்றி பெற்றது.


இந்திய அணி இன்று இரவு 10.15 மணிக்கு  அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனியுடன் மோதுகிறது. காலிறுதியில் பிரிட்டன் அணிக்கு எதிராக ரெட் கார்டு காட்டப்பட்ட ரோகித்தாஸ் ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர் ஜெர்மனி அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கமாட்டார்.






இந்திய அணிக்கு பின்னடைவு:


மொத்தம் 16 பேர் கொண்ட இந்திய அணி 15 பேர் கொண்ட அணியாகவே அரையிறுதியில் களமிறங்குகிறது. ரோகித்தாசுக்கு விதிக்கப்பட்ட ஒரு போட்டிக்கான தடைக்கு எதிராக இந்திய ஹாக்கி நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. இருப்பினும், அவர் ஜெர்மனிக்கு எதிரான ஆடுவது வாய்ப்புகள் குறைவு என்றே கூறலாம்.


ரோகித்தாஸ் காலிறுதி போட்டியின்போது பந்தை வேகமாக கடத்திச் சென்றபோது அவரது ஹாக்கி மட்டை தெரியாமல் இங்கிலாந்து வீரர் வில் கால்னன் முகத்தில் பட்டது. இதையடுத்து, இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து அவருக்கு தொடர்ந்து ஆட தடை விதிக்கப்பட்டது.


அரையிறுதியில் சமாளிக்குமா இந்தியா?


இதையடுத்து, 1-1 என்ற கணக்கில் போட்டியை டிரா செய்த இந்திய அணி ஷூட் அவுட் முறையில் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் வெற்றி பெற்றால் இந்திய அணி நீண்ட வருடத்திற்கு பிறகு ஒலிம்பிக்கில் ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.


சிறந்த தடுப்பாட்டுக்காரரான அமித் ரோகித்தாஸ் இந்திய அணியின் சிறந்த டிபெண்டர் ஆவார். இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியதற்கு ரோகித்தாஸின் சிறப்பான ஆட்டமும் ஒரு காரணம் ஆகும். இந்த நிலையில், அரையிறுதியில் ரோகித் தாஸ் இல்லாமல் இந்திய அணி களமிறங்குவது இந்திய அணிக்கு பெரும் சவாலான ஒன்றாகும். மேலும், அவருக்கு பதிலாக இன்று அரையிறுதியில் யார் களமிறங்குவார்? ரோகித் தாசுக்கு நிகராக அவர் ஆடுவாரா? என்ற பல சவால்கள் தற்போது இந்திய அணி முன்னால் நிற்கிறது. இந்த ஒலிம்பிக்கில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது முதல் இந்திய அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.