உலகில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படுவது ஒலிம்பிக். 206 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் ஒலிம்பிக் திருவிழா பாரீஸ் நகரில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதற்காக இந்திய வீரர்கள், வீராங்கனைகள் ஏற்கனவே பாரீஸ் நகரத்திற்கு சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த சூழலில், ஒலிம்பிக் தொடரில் என்ன தேதிகளில் இந்திய வீரர்களுக்கு போட்டிகள்? எத்தனை வீரர்கள் பங்கேற்கின்றனர்? என்பது குறித்து கீழே விரிவாக காணலாம்.


வில்வித்தை:


வில்வித்தை போட்டி நாளை மறுநாள் தொடங்கி ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடக்கிறது. இதில் 6 இந்தியர்கள் பங்கேற்கின்றனர்.


தடகளம்:


இந்திய வீரர்களுக்கு பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ள தடகளப் போட்டிகள் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்கிறது. தடகளப் போட்டிகளில் மொத்தம் 29 இந்தியர்கள் பங்கேற்கின்றனர்..


பேட்மிண்டன்:


பேட்மிண்டன் போட்டி நாளை மறுநாள் தொடங்கி வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடக்கிறது. வீரர்கள், வீராங்கனைகள் உள்பட 7 இந்தியர்கள் இதில் பங்கேற்கின்றனர்.


குத்துச்சண்டை:


குத்துச்சண்டை போட்டிகள் நாளை மறுநாள் முதல் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்கிறது. இதில் மொத்தம் 6 இந்தியர்கள் பங்கேற்க உள்ளனர்.


குதிரையேற்றம்:


குதிரையேற்றம் போட்டிகள் வரும் 30ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் ஒருவர் மட்டுமே பங்கேற்கிறார்.


கோல்ஃப்:


ஒலிம்பிக் போட்டிகள் கோல்ஃப் ஆகஸ்ட் 1ம் தேதி ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கிறது. இதில் மொத்தம் 4 இந்தியர்கள் பங்கேற்கின்றனர்.


ஹாக்கி:


இந்திய அணி தங்கப்பதக்கத்தை அதிகளவில் கைப்பற்றியுள்ள குழு விளையாட்டான ஹாக்கி வரும் 27ம் தேதி தொடங்குகிறது. ஹாக்கிப் போட்டித் தொடர்கள் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடக்கிறது. இந்திய அணி சார்பில் 16 வீரர்கள் பங்கேற்கின்றனர்.


ஜூடோ:


ஜூடோ விளையாட்டுப் போட்டி ஆகஸ்ட் 2ம் தேதி நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் ஒருவர் மட்டுமே பங்கேற்கிறார்.


படகுப்போட்டி:


ஒலிம்பிக் தொடரில் படகுப்போட்டி வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் 2 பேர் பங்கேற்கின்றனர்.


துப்பாக்கிச்சுடுதல்:


இந்தியாவிற்கு தனிநபர் பிரிவில் முதல் தங்கத்தை பெற்றுத்தந்த விளையாட்டாக துப்பாக்கிச்சுடுதல் உள்ளது. துப்பாக்கிச்சுடுதல் போட்டிகள் நாளை மறுநாள் தொடங்குகிறது. வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெற உள்ள போட்டியில் 21 இந்தியர்கள் பங்கேற்கின்றனர்.


நீச்சல்:


ஒலிம்பிக் தொடரில் நீச்சல் போட்டிகள் வரும் 28 மற்றும் 29 தேதிகளில் நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் 2 பேர் மட்டுமே பங்கேற்கின்றனர்.


டேபிள் டென்னிஸ்:


டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடப்பு ஒலிம்பிக்கில் வரும் 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்கிறது. இந்தியா சார்பில் மொத்தம் 6 பேர் கலந்து கொள்கின்றனர்.


பாய்மரப் படகுப்போட்டி:


ஒலிம்பிக்கில் பாய்மரப் படகுப்போட்டி வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை நடக்கிறது. இதில் மொத்தம் 2 பேர் இந்தியா சார்பில் பங்கேற்கின்றனர்.


டென்னிஸ்:


டென்னிஸ் போட்டிகள் வரும் 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் 2 பேர் பங்கேற்கின்றனர்.


மல்யுத்தம்:


சமீபகாலமாக உலக அரங்கில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டுகளில் மல்யுத்தமும் ஒன்றாகும். இந்தப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடக்கிறது. இதில் மொத்தம் 6 இந்தியர்கள் பங்கேற்கின்றனர்.


பளுதூக்குதல்:


பளுதூக்குதல் விளையாட்டில் இந்தியா சார்பில் ஒருவர் மட்டுமே பங்கேற்கிறார். இந்த போட்டிகள் வரும் 7ம் தேதி நடக்கிறது.


நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியா மொத்தம் 16 போட்டிகளில் பங்கேற்கிறது. 16 போட்டிகளில் பங்கேற்க இந்தியா சார்பில் 112வீரர்கள் களம் கண்டுள்ளனர்.