டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா – ஜெர்மனி அணிகள் இன்று மோதின. ரியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்த ஜெர்மனி, இந்த போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் பதக்கத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்கியது. இதுவரை 5 முறை இந்தியா - ஜெர்மனி அணிகள் மோதியுள்ள போட்டிகளில். 1 முறை மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.


இந்திய ஹாக்கி அணி கடைசியாக 1980ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது. அதன்பின்னர் நடைபெற்ற எந்த ஒரு ஒலிம்பிக் போட்டியிலும் இந்திய அணி பதக்கம் வெல்லவில்லை. அந்த முறை ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி போட்டி இல்லை. புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் விளையாடியது. கடைசியாக 1972ஆம் ஆண்டு ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. அதன்பின்னர் தற்போது 41 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பதக்கம் வெறும் வாய்ப்பை பெற்றுள்ளது. பெல்ஜியம் அணியுடனான அரை இறுதி போட்டியில், 5-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதனால் ஃபைனல்ஸ் செல்லும் வாய்ப்பை இழந்த இந்திய அணி, வெண்கலப் பதக்கத்திற்காக இன்று விளையாடியது. 


போட்டி தொடக்கத்தில், ஜெர்மனிக்கு முதல் கோல் அடித்து டைமுர் முன்னிலை கொடுத்தார். ஆனால், அதனை தொடர்ந்து இந்தியாவின் சிம்ரன்ஜித் சிங் இந்தியாவுக்காக முதல் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். போட்டி சமனான அடுத்த நில நிமிடங்களில், ஜெர்மனிக்கு அடுத்தடுத்து இரண்டு கோல்கள். 3-1 என ஜெர்மனி முன்னிலை பெற்ற போது, கோல் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி போராடியது. அப்போது, இந்தியாவின் ஹர்திக் சிங், ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர் இந்தியாவுக்கு இரண்டு கோல்கள் அடித்து போட்டியை சமன் செய்தனர். முதல் பாதி முடிவில், 3-3 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன. 






அதனை தொடர்ந்து நடைபெற்ற மூன்றாம் காலிறுதியில், இந்தியா 2 கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது, இதனால், ஜெர்மனிக்கு சிக்கலானது. 2 கோல்கள் வித்தியாசத்தில் இந்தியா முன்னிலை பெற்றிருந்த நிலையிலேயே, கடைசி காலிறுதி தொடங்கியது. கோல் அடிக்க முற்பட்டு ஜெர்மனியும், தடுப்பாட்டத்தை முழு வீச்சில் வெளிப்படுத்திய இந்திய அணியும், போட்டியை வெல்ல போராடினர்.


48வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஜெர்மனி கோல் அடித்தது. இதனால், 4-5 என சம நிலையை நெருங்கியது ஜெர்மனி. கடைசி 15 நிமிடங்கள் மிகவும் பரபரப்பாக இருந்தது. கடைசி நிமிடம் வரை ஜெர்மனி அணி கோல் அடிக்க போராடியது, முன்னிலையை தக்க வைக்க இந்திய அணி போராடியது. போட்டி முடிவில், 5-4 என்ற கோல் கணக்கில் இந்திய அணி போட்டியை வென்று 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கத்தை வென்றது.