கால்பந்து உலகில் அசைக்க முடியாத ஒரு ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் மெஸ்ஸி. அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த இவர் 2004 ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி விளையாடி வருகிறார். பார்சிலோனா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில்  மெஸ்ஸி உள்ளார். அவர் அந்த அணியுடனான தனது 21 வருட உறவை கடந்த ஜூன் மாதம் முடித்து கொண்டார். பார்சிலோனா அணியுடனான அவரது ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், மீண்டும் அவரை தக்க வைக்க போவதில்லை என்ற  முடிவு எடுக்கப்பட்டது. ஏனென்றால் பார்சிலோனா அணி தற்போது பெரிய நிதி நெருக்கடியில் உள்ளது. இதனால் அவர்களால் மெஸ்ஸிக்கு உரிய ஊதியம் அளிக்க முடியாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


இருப்பினும் இந்த முடிவிற்கு முன்பாக பார்சிலோனா அணி சார்பில் மெஸ்ஸியுடன் குறைந்த ஊதியத்திற்கு மீண்டும் 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிகிறது. ஆனால் அதில் இரு தரப்பிற்கும் நல்ல முடிவு எட்டப்படவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் இன்று பார்சிலோனா கிளப்பில் மெஸ்ஸி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மிகவும் மன வருத்தத்துடன் இருந்த மெஸ்ஸி கண் கலங்கினார். 






அப்போது, "இப்படி ஒரு நிலைமை வரும் என்று நான் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. எனக்கு தற்போது என்ன சொல்ல வேண்டும் என்றே தெரியவில்லை. 21 ஆண்டுகளுக்காக இந்த அணியுடன் இருந்த என்னுடைய பந்தத்தை முடித்து கொள்கிறேன். இந்த அணிக்கு என்னுடைய முதல் நாளில் இருந்து தற்போது வரை என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்தேன். இப்படி ஒரு நாள் வரும் என்று நான்  எண்ணவில்லை. என்னுடைய முழு கால்பாந்து வாழ்க்கையையும் இங்கு செலவழித்த பிறகு இந்த இடத்தை விட்டுச்செல்ல எனது மனம் இடம் கொடுக்கவில்லை. ஆனால் எனக்கு வேறு வழி இல்லை. இந்த ஆண்டு எந்தவித போட்டிகளிலும் பங்கேற்காமல் என்னுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவிடப்போகிறேன்" எனக் கூறினார். 


இந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கண்ணீர் விட்டு அழுது தன்னுடைய முதல் கிளப்பிற்கு பிரியாவிடை கொடுத்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவருடைய ரசிகர்களுக்கும் இந்த முடிவும் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த ஆண்டு நடைபெற்ற கோபா அமெரிக்கா தொடரில் அர்ஜென்டினா அணிக்காக மெஸ்ஸி விளையாடி முதல் சர்வதேச கோப்பையை பெற்று தந்தார். இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி பிரேசிலை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. 


மேலும் படிக்க:புதிய ஒப்பந்ததிற்கு ‘நோ’, இனி பார்சிலானோ அணியில் மெஸ்ஸி இல்லை!