ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 தொடர் ஆகஸ்ட் மூன்றாம் தேதி அதாவது நேற்று மிகச்சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. . இந்த தொடருக்கான அட்டவணை ஏற்கனவே ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்டிருந்தது. மொத்தம் 20 போட்டிகள் கொண்ட இந்த தொடர் சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் தொடரில், கொரியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா, இந்தியா என மொத்தம் 6 நாடுகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கிய தொடர் ஆகஸ்ட் 12ஆம் தேதி முடிவடையவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிய ஹாக்கி கூட்டமைப்புடன் இணைந்து தமிழ்நாடு அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது. 


போட்டியின் இரண்டாவது நாளான இன்று மொத்தம் மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சவுத் கொரியாவும் மூன்று முறை கோப்பையை தட்டித் தூக்கி, 5 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மிகவும் அனுபவம் வாய்ந்த அணியுமான பாகிஸ்தான் அணியும் மோதிகொண்டன. இதில் சவுத் கொரியா அணி தனது முதல் போட்டியில் ஜப்பான் அணியை வீழ்த்தி நம்பிக்கையுடனும், பாகிஸ்தான் அணி மலேசியா அணியிடம் தோல்வி பெற்று வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. 


இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி முதல் சுற்று ஆட்டத்தில் அதாவது முதல் 15 நிமிடத்தில் இரு அணிகளும் மிகச் சிறப்பாக விளையாடியது. ஆனால் இரு அணிகளும் ஒரு கோல் கூட போடவில்லை. இரண்டாவது சுற்றில் மிகவும் சுதாரித்துக்கொண்டு ஆடிய பாகிஸ்தான் அணி தனது முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றது. முதல் பாதி ஆட்டம் முடிந்த நிலையில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. 






அதன் பின்னர் மூன்றாவது சுற்று முடிவில் இரு அணிகளும் ஒரு கோல் கூட போடவில்லை என்றாலும், பாகிஸ்தான் அணி சவுத் கொரியா அணியை கோல் போடவிடக்கூடாது என்ற திட்டத்தை களத்தில் சிறப்பாக அரங்கேற்றியது. இந்நிலையில் நான்காவது சுற்று ராதாகிருஷ்ணன் மைதானமே அனல் பறக்கும் அளவிற்கு இருந்தது. மிகவும் தீவிரமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய சவுத் கொரியா அணி ஒரு கோல் போட போட்டி சமன் ஆனது. அதன் பின்னர் இருந்த நேரத்தில் மேற்கொண்டு ஒரு கோல் கூட போடப்படவில்லை. மிகவும் பரபரப்பாகச் சென்ற இந்தப் போட்டி நான்கவது சுற்று முடிவில் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.