மயிலாடுதுறை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14வது ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பைக்கான வெற்றிக் கோப்பை, தமிழ்நாடு முழுவதும் வலம் வரும் நிலையில், இன்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தந்தது. மாவட்டத்தின் தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் இந்தக் கோப்பை உற்சாகமாகக் காட்சிப்படுத்தப்பட்டது.

Continues below advertisement

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை: தமிழ்நாட்டிற்குப் பெருமை!

ஹாக்கி விளையாட்டில் உலக அரங்கில் இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் விதமாக, 14வது ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி, வருகின்ற 28.11.2025 முதல் 10.12.2025 வரை முதன்முறையாக நம் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. சென்னை மற்றும் மதுரையில் இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்தப் போட்டியில், போட்டி நடத்தும் நாடான இந்தியா உட்பட உலகின் தலைசிறந்த 24 நாடுகள் பங்கேற்க உள்ளன. உலகக் கோப்பையைத் தமிழகத்தில் நடத்துவது தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறைக்கு ஒரு மைல்கல்லாக அமையும் என்று கருதப்படுகிறது.

Continues below advertisement

வெற்றிக் கோப்பையின் பயணத் துவக்கம்

இந்தப் போட்டிக்கான வெற்றிக் கோப்பையானது, தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், இளைய தலைமுறையினரிடையே ஹாக்கி விளையாட்டின் மீதான ஆர்வத்தைத் தூண்டுவதும், போட்டி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த யாத்திரையின் நோக்கமாகும்.

இந்தக் கோப்பைப் பயணத்தை, கடந்த 10.11.2025 அன்று சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறையில் உற்சாக வரவேற்பு

இந்த உற்சாகமான பயணத்தின் ஒரு பகுதியாக, இன்று (நவம்பர் 17) 14வது ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தந்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் கொண்டாடும் விதமாக, மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் திரண்டு வந்து வெற்றிக் கோப்பையை ஆரவாரத்துடன் வரவேற்றனர். இந்தக் கோப்பைக் காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியில், மாவட்டத்தின் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்:

 

மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் ,பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்தக் கோப்பையை அருகிலிருந்து பார்வையிட்டு, இந்த வாய்ப்பை உருவாக்கிய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கும், ஹாக்கி இந்தியாவிற்கும் பாராட்டு தெரிவித்தனர்.

 

இந்த நிகழ்வில் மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர் மற்றும் பல உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக, ஹாக்கி கோப்பை, அடுத்த மாவட்டத்திற்கான தனது பயணத்தைத் தொடர்ந்தது. இந்தப் பயணத்தின் மூலம் ஹாக்கி விளையாட்டு குறித்த விழிப்புணர்வும், ஆரோக்கியமான விளையாட்டு மனப்பான்மையும் மாவட்டம் முழுவதும் பரப்பப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.