இதுவரை இல்லாத வகையில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடக்கவிருந்த ஞாயிற்றுக்கிழமை மழையால் கைவிடப்பட்டு, பின்னர் திங்கள் கிழமை போட்டி துவங்கி, செவ்வாய் கிழமை வரை கடந்து, ரிசர்வ் நாளில் முடிவு எட்டப்பட்டுள்ளது. ஏனென்றால் ரிசர்வ் நாளிலும் மழை பெய்ய, ஆட்டம் மேலும் தமாதமானது. இதனால் இரண்டாவது இன்னிங்ஸ் 15 ஓவராக குறைக்கப்பட்டது. அப்போதும் மூன்று நாள் நடந்த இறுதிப் போட்டி கடைசி பந்து வரை சென்ற நிலையில், thrilling வெற்றியை சென்னை அணி ருசித்ததோடு, கோப்பையையும் வென்றுள்ளது. 


கோப்பை வென்ற சென்னை


குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வென்று, ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை கைப்பற்றியுள்ள சென்னை அணி மும்பை அணியை சமன் செய்துள்ளது. கடைசி ஓவரில் மோஹித் ஷர்மா பந்து வீச, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக ஆடி ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்தார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஆர்சிபி நட்சத்திரம் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜாவை பாராட்டி, ஒரு செய்தியை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து கொண்டார். மேலும் அவரது பதிவில் சிஎஸ்கே கேப்டனான எம்எஸ் தோனியைப் பற்றியும் சிறப்பாக குறிப்பிட்டார்.






ஆட்டத்தை வென்று தந்த ஜடேஜா


கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மோஹித் தொடர்ந்து நான்கு யார்க்கர்களை கச்சிதமாக வீச, அந்த நான்கு பந்துகளில் அவர் வெறும் மூன்று ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஐபிஎல் வரலாற்றில் கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறை வெல்லும் மூன்றாவது அணி என்ற பெயரை பெற குஜராத் அணி வெறித்தனமாக விளையாடியது. ஆனால் மோஹித் ஷர்மா ஐந்தாவது பந்தில் யார்கரை கொஞ்சம் மிஸ் செய்ய, அதனை சிக்சருக்கு அனுப்பினார் ஜடேஜா.


தொடர்புடைய செய்திகள்: CM Stalin Wish CSK: 'தோனியின் தலைமையின் கீழ் 5வது கோப்பை..' சி.எஸ்.கே.விற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!


விராட் கோலி பதிவு


ஜிடி அணியினர் மீது பிரஷர் அதிகரிக்க, கேப்டன் ஹர்திக் பாண்டியா மீண்டும் மோஹித்திடம் ஓடி வந்து நீண்ட நேரம் பேசினார். ஆனால் மோஹித் இந்த முறை லைன் மற்றும் லெங்த்தை முழுவதும் தவறவிட்டார். ஜாடேஜாவின் கால்களில் லோ ஃபுல் டாசாக வீச, அதனை லேசாக தட்டி பவுண்டரிக்கு அனுப்பினார் ஜடேஜா. இதனால் CSK 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த பெரிய வெற்றிக்குப் பிறகு, கோலி இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்டோரியை பகிர்ந்து கொண்டார். அதில் அவர், “வாட் எ சாம்பியன் ரவீந்திர ஜடேஜா. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தோனிக்கு சிறப்பு வாழ்த்துக்கள்," என்று குறிப்பிட்டார். 






லண்டனில் இந்திய வீரர்கள்


இந்தியாவில் இருந்து மைல்கள் தொலைவில் லண்டனில் இருந்த போதிலும், அகமதாபாத்தில் நடக்கும் இறுதிப்போட்டியை கோலி டிவியில் பார்த்துள்ளார். ஜூன் 7 ஆம் தேதி ஓவலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அணி தயாராகி வரும் நிலையில், அவர் தற்போது இந்தியாவைச் சேர்ந்த தனது சில சக வீரர்களுடன் லண்டனில் இருக்கிறார். முன்னதாக மாலையில், பிசிசிஐ, வீரர்கள் முகமது சிராஜ், அஷ்வின் மற்றும் அக்சர் படேல் உட்பட சில இந்திய அணி வீரர்களுடன், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், அணி பேருந்தில் பயிற்சி முடித்து ஹோட்டலுக்குத் திரும்பும் போது போட்டியை ஆர்வமாகப் பார்த்த படத்தைப் பகிர்ந்திருந்தது.