நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.


நடப்பு தொடரில் இதுவரை:


நடப்பு சீசனை பொறுத்தவரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியை கண்டுள்ளது. அதேசமயம் பஞ்சாப் அணி முதல் ஆட்டத்தில் டக் வொர்த் லூயிஸ் முறைப்படி 7 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 5  ரன்கள் வித்தியாசத்திலும் வென்றது.  இதன் மூலம் ஹாட்ரிக் வெற்றிக்காக பஞ்சாப் அணியும் , ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்ய  ஐதராபாத் அணியும் முயலும் என்பதால் இப்போட்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 


பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணியினர் இன்றைக்கு தங்கள் அணிக்கு இப்படியான மோசமான நிலை உருவாகும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். போட்டியின் முதல் பந்தில் பஞ்சாப் அணியின் முதல் விக்கெட் விழுந்தது. அதன் பின்னர் இரண்டாவது ஓவரில் மேலும் ஒரு விக்கெட்டை பஞ்சாப் அணி இழந்தது. அதன் பின்னர் களத்துக்கு வந்த சாம் கரன் 4வது ஓவரில் தனது விக்கெட்டை இழக்க பஞ்சாப் அணி தடுமாற தொடங்கியது. பவர்ப்ளே முடிவில் பஞ்சாப் அணி  3 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் சேர்த்து இருந்தது. 


இம்பேக்ட் ப்ளேயராக பஞ்சாப் அணியின் சார்பில் ரஸா களமிறக்கப்பட்டார். அவரும் ஏமாற்ற, பஞ்சாப் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தவித்தது. விக்கெட்டுகள் ஒரு புறம் இழந்தாலும், பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் மட்டும் நிலையான மற்றும் பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவான் 66 பந்தில் 99 ரன்கள் எடுத்து ஒரு ரன்னில் சதத்தினை தவறவிட்டார். இதில் 12 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் பறக்கவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


அதன் பின்னர் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிய ஹைதராபாத் அணி தனது முதல் விக்கெட்டை 27 ரன்களிலும், இரண்டாவது விக்கெட்டை 45 ரன்களிலும் இழந்தது. அதன் பின்னர் த்ரிப்பாட்டியும் ஹைதராபாத் அணியின் கேப்டனும் அதிரடி ஆட்டக்காரருமான மார்க்ரம் இணைந்து சிறப்பாக விளையாடினர். இவர்களது பார்ட்னர்ஷிப்பில் ஹைதராபாத் அணியின் ஸ்கோர் வெற்றி இலக்கை நோக்கி விறுவிறுவென நகர்ந்தது. 


அரை சதம் கடந்த பிறகு த்ரிபாட்டி அதிரடியாக ஆட அணியின் ஸ்கோர் மளமளவென அதிகமானது. மார்க்ரம் த்ரிபாட்டிக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுக்க ஹைதராபாத் அணி 17.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஹைதராபாத் அணி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இறுதிவரை களத்தில் இருந்த த்ரிப்பாட்டி74 ரன்களும் மார்க்ரம் 37 ரன்களும் எடுத்து இருந்தனர்.