ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான்  214 அணி ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.


டாஸ் வென்ற ராஜஸ்தான்:


ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. ஜெய்பூரில் உள்ள சவாய் மன்சிங் இந்தூர் மைதானத்தில் நடைபெறும் போட்டியில்,  டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு  செய்தது.  நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியில், 72 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. அதற்கு பழிவாங்கும் நோக்கில் ஐதராபாத் அணி களமிறங்கியது. அதேநேரம், கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள ராஜஸ்தான், இன்றைய போட்டியின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்ப முனைப்பு காட்டி வருகிறது.


ஜெய்ஷ்வால் அதிரடி:


ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஷ்வால் மற்றும் பட்லர் கூட்டணி அதிரடியாக ரன் குவித்தது. குறிப்பாக ஜெய்ஷ்வால் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். ஆனால், 18 பந்துகளில் 35 ரன்களை சேர்த்து ஜான்சென் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஜெய்ஷ்வால் - பட்லர் கூட்டணி ம் முதல் விக்கெட்டிற்கு 54 ரன்களை சேர்த்தது. 


மிரட்டிய பட்லர் - சாம்சன் கூட்டணி:


இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த பட்லர் மற்றும் சாம்சன் கூட்டணி அதிரடியாக ரன் குவித்தது. பவுண்டரிகளை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் சிக்சர்களை விளாசியது இந்த கூட்டணி. இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் ஐதராபாத் பந்துவீச்சாளர்கள் திணறினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பட்லர் 32 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதனிடையே, இந்த கூட்டணி வெறும் 61 பந்துகளில் 100 ரன்களை சேர்த்து ராஜஸ்தான் அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றது. இந்த கூட்டணியை பிரிக்க ஐதாராபாத் எடுத்த பல முயற்சிகளும் தோல்வியுற்றன. குறிப்பாக சுழற்பந்துவீச்சாளர் மார்கண்டே தான் வீசிய 4 ஓவர்களில் 51 ரன்கலை வாரிக்கொடுத்தார்.


அரைசதமும், தவறவிட்ட சதமும்:


அதிரடியாக விளையாடிய சாம்சன் 33 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.  தொடர்ந்து ஐதராபாத்தின் பந்துவீச்சை பட்லர் நாலாபுறமும் சிதறடிக்க, சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 95 ரன்களில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும். கடைசி 3 ஓவர்களில் அதிகப்படியான பவுண்டரிகளை கொடுக்காமல் ஐதராபாத் அணி சிறப்பாக பந்துவீசியது.


ஐதராபாத்திற்கு இலக்கு:


இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி வெறும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 214 ரன்களை குவித்தது. ஐதராபாத் சார்பில் ஜான்சென் மற்றும் புவனேஷ்வர் குமார் மட்டும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த இதையடுத்து ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 215 ரன்கள் என்ற இலக்கை ஐதராபாத் எட்டுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.