GT vs LSG, IPL 2023: லக்னோ மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது இம்பேக்ட் ப்ளேயரை களமிறக்குவதில் ஏற்பட்ட குழப்பத்தினால் அவசர அவசரமாக குஜராத் வீரர் சாஹா பேண்ட்டை மாற்றி அணிந்து வந்தது தற்போது இணையத்தில் வேடிக்கையாக பகிரப்படுகிறது. 


திடீர் குழப்பம்:


ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நாடு  முழுவதும் உள்ள முக்கிய மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடந்து வரும் போட்டியில் குஜராத் அணியும் லக்னோ அணியும் விளையாடி வருகின்றன. இந்த போட்டில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் சேர்த்தது.


இதன் பின்னர் பந்து வீச களமிறங்கிய குஜராத் அணி இம்பேக்ட் ப்ளேயராக சாஹாவிற்கு பதில் பரத்தை களமிறக்கினர். இதனைக் கண்ட கள நடுவர்கள் உடனே பரத்தை மைதானத்திற்குள் வருவதை தடுத்தனர். அதன் பின்னர் வந்த குஜராத் அணி நிர்வாகத்தினர் நடுவர்களிடம் பேசினர். இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் பரத் வெளியேற்றப்பட்டு சாஹா மைதானத்திற்குள் வந்தார். ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்த சாஹாவை உடனடியாக களமிறங்கச் சொன்னதால், அவரும் அவசர அவசரமாக உடைகளை அணிந்து கொண்டு வந்தார்.






பேண்டை திருப்பி போட்டு வந்த சாஹா:


இதில் சாஹா பேண்ட்டை உல்ட்டாவாக அணிந்து கொண்டு வந்து விட்டார். இதனை கவனித்த குஜராத் அணி வீரர்களும் போட்டி வர்ணனையாளர்களும் சிரிக்க, சாஹாவும் சிரித்தபடி மைதானத்திற்குள் வந்து ஒரு ஓவர் மட்டும் கீப்பராக செயல்பட்டு அதன் பின்னர் வெளியேறினார். 


இம்பேக்ட் ப்ளேயர் விதிப்படி, இம்பேக்ட் ப்ளேயரை ஒரு ஓவர் முடிந்த பின்னர் தான் களமிறக்க முடியும். சாஹாவுக்கு பதில் பரத் களமிறக்கப்பட்டது இரண்டவது இன்னிங்ஸானாலும், ஒரு ஓவர் முடிந்த பின்னர் தான் களமிறக்க முடியும். இல்லை என்றால் குஜராத் அணி பேட்டிங் செய்யும் போதே சாஹா தனது விக்கெட்டை இழந்ததும், அவருக்கு பதில் பரத்தை களமிறக்கிருக்க வேண்டும். இதனால் தான் நடுவர்கள் பரத்தை அனுமதிக்கவில்லை. 


இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்த லக்னோ அணியின் பந்து வீச்சு அகமதாபாத் அமைதானத்தில் எடுபடவில்லை. இதனால் அதிரடியாக ரன்கள் குவித்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 227 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான  சாஹா 81 ரன்களும் கில் 94 ரன்களும் எடுத்தனர். இதில் கில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.