ராஜஸ்தான், சென்னை அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டியில் யார் யார் விளையாட உள்ளார்கள் என்ற விவரத்தை இங்கு காணலாம். 


16வது ஐ.பி.எல். சீசன் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 36 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இன்று நடைபெறும் 37வது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மூன்றாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 


பிளேயிங் லெவனில் யாருக்கு இடம்?


ராஜஸ்தான் அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன்(கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மேயர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், ஆடம் ஜம்பா, சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்


சென்னை அணி: ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(கேப்டன்), மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா, ஆகாஷ் சிங்


இதுவரை நடந்த வரலாறு


கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சென்னை அணியும் ராஜஸ்தான் அணியும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறது. சூதாட்ட விவகாரத்தில் இரு அணிகளுமே இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டது. அதேசமயம் இதுவரை 27 முறை நேருக்கு நேர் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதியுள்ளது. இதில் சென்னை அணி 15 போட்டிகளிலும் ராஜஸ்தான் அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 


இன்றைய போட்டி நடைபெறும் ஜெய்ப்பூர் மைதானத்தில் இரு அணிகளும் 7 போட்டிகளில் விளையாடி சென்னை அணி 4 முறை ராஜஸ்தானிடம் தோல்வியடைந்துள்ளது. சென்னை அணிக்கு எதிரான ராஜஸ்தான் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 223 ஆகவும், குறைந்தபட்சம் 126 ஆகவும் உள்ளது. அதேசமயம் சென்னை அணி ராஜஸ்தானுக்கு எதிராக 246 ரன்களை அதிகப்பட்சமாகவும், 109 ரன்களை குறைந்தப்பட்சமாகவும் எடுத்துள்ளது. 


இந்த சீசனில் சென்னையில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தானிடம்  சென்னை அணி தோல்வியடைந்திருந்தது. அதற்கு பழி தீர்க்கும் வகையில் சென்னை அணி இப்போட்டியில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.