நடிகர் விக்ரம் தான் கிரிக்கெட் பார்க்க ஒரே காரணம் தல தோனிதான் என கூறியுள்ளார். 


நாளை முதல் PS 2


கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மையப்படுத்தி மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி இப்படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து சுமார் 500 கோடிகள் வரை வசூலித்து மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது .


இந்நிலையில் நாளை பொன்னியின் செல்வன் 2 வெளியாகும் நிலையில் இரண்டாம் பாகத்தை ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் சென்ற மாதம் தொடங்கி உச்சக்கட்ட ப்ரமோஷன் பணிகளை படக்குழு மேற்கொண்டு வருகிறது. 


அதன் ஒரு பகுதியாக இன்று (ஏப்ரல், 27) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ள போட்டியின் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகும் நேரலையில் பொன்னியின் செல்வன் படக்குழு கலந்து கொள்ளவுள்ளது. இது குறித்த அறிவிப்பு முன்னோட்டத்தில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் தங்களுடைய கிரிகெட் அனுபவம் குறித்து தெரிவித்துள்ளனர். 






அதில், பூங்குழலி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா லக்‌ஷ்மி தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்தான். தனது கல்லூரி காலத்தில் அவரால் நான் பல அடிகளை வாங்கியுள்ளேன் என கூறியுள்ளார். 


அதேபோல், யாருடைய வாழ்க்கையை படமாக்கினால் நன்றாக இருக்கும் என கேட்டதற்கு பொன்னியின் செல்வனாக நடித்த ஜெயம் ரவி யுவராஜ் சிங்கின் பெயரைச் சொன்னார். இந்த கலந்துரையாடலின் ஒரு பகுதியில் ஆதித்த கரிகாலனாக நடித்த விக்ரம் நான் கிரிக்கெட் பார்ப்பதற்கு ஒரே காரணம் தல தோனி தான். நாங்கள் அவரை தல என அழைப்போம் என அவர் கூறியுள்ளார். மேலும், குந்தவையாக நடித்த த்ரிஷா தோனி மைதானத்திற்குள் வரும்போது தனி உற்சாகம் பிறக்கும் என கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


முன்னதாக இந்தப் படத்தின் ‘அகநக’ , ‘சின்னஞ்சிறு நிலவே’ பாடல்களின் காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. 


விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயம் ரவி, ஷோபிதா உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு என கடந்த ஒரு வாரமாக தீவிர ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.