ஐபிஎல் தொடரில் விராட் கோலி சென்னை அணி கேப்டன் தோனியை பின்னுக்குத் தள்ளி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். 


ஐபிஎல்:


முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கூடுதல் பரபரப்பு, இறுதிகட்ட எதிர்பாராத திருப்பங்களுடன் கடந்த மாதம் நிறைவடைந்தது 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர். 10 அணிகளை சேர்ந்த வீரர்கள் மைதானத்தில் கோப்பைகாக முட்டி மோதிக்கொண்டிருக்க, நட்சத்திர வீரர்களின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வார்த்தகளால் களமாடிக்கொண்டிருந்தனர். குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத நட்சத்திரங்களான, தோனி, கோலி மற்றும் ரோகித் சர்மா ரசிகர்களுக்கு இடையேயான வார்த்தப் போர் சமூக வலைதளங்களையே கொதிக்கச் செய்தது.


வெளியான முடிவுகள்:


இந்நிலையில், ஐபிஎல் தொடரின் போது சமூக வலைதளங்களில் அதிகமுறை குறிப்பிடப்பட்ட வீரர்கள் யார் என்பது தொடர்பான தனியார் நிறுவனத்தின் ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, கிரிக்கெட் மட்டுமின்றி சமூகவலைதளங்களிலும் தான் கிங் என்பதை நிரூபித்துள்ளார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான கோலி.  


கோலி முதலிடம்:


நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பிளே-ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை. ஆனாலும், கோலிக்கான வரவேற்பு என்பது வழக்கம்போல் ஏகபோகமாக இருந்தது. பெங்களூரு மட்டுமின்றி அவர் விளையாடிய அனைத்து மைதானங்களிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஐபிஎல் தொடர்ன் போது சமூக வலைதலங்களில் நடந்த உரையாடல்களில் அதிகமுறை குறிப்பிடப்பட்ட வீரர்களின் பட்டியலில் கோலி முதலிடம் பிடித்துள்ளார். அதாவது 70 லட்சம் முறை கோலியின் பெயர் உரையாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதோடு, விளம்பரம் தொடர்பான உரையாடல்களிலும் விராட் கோலியின் பெயர் தான் அதிகமுற பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தோனி, ரோகித்திற்கான இடம்:


ஐபிஎல் தொடரின் போது சமூக வலைதள உரையாடல்களில் அதிகமுறை குறிப்பிடப்பட்ட வீரர்களின் பட்டியலில், சென்னை அணி கேப்டன் தோனி மற்றும் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். அதன்படி, தோனியின் பெயர் 60 லட்சம் முறையும், ரோகித் சர்மாவின் பெயர் 30 லட்சம் முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரிசையில் சென்னை வீரர் ரவீந்திர ஜடேஜா, குஜராத் வீரர் சுப்மன் கில் மற்றும் மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் ஆகியோரது பெயர் தலா 10 லட்சம் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.


ரிங்கு சிங் அபாரம்:


குஜராத் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்சர்களை விளாசி கொல்கத்தா அணியை வெற்றி பெறச் செய்தது தொடர்பான பதிவுகள் சமூக வலைதளங்களில் அதிகப்படியான லைக்குகளை பெற்றுள்ளது. 10 அணிகளின் பெயர்களும் சமூக வலைதளங்களில் மொத்தமாக 4 கோடியே 20 லட்சம் முறை குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை அணியின் பெயர் 76 லட்சம் முறை உரையாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.