கிரிக்கெட் உலகில் தற்போது அனைவரும் அதிர்ச்சியோடு ஒரு விஷயம் குறித்து பேசிக்கொண்டு உள்ள விஷயம் ஒன்றுதான்.  இந்தியன் பிரீமியர் லீக்கின் மிகவும் பலமான அணியான மும்ப்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவை ஸ்டெப் டவுன் செய்து குஜராத் அணியில் இருந்து ட்ரேட் செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்து ஷாக் கொடுத்துள்ளது மும்பை அணி நிர்வாகம்.


மும்பை அணியின் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் வெறித்தனமான ரோஹித் சர்மா ரசிகர்களை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது. இது குறித்து ரோஹித் சர்மாவோ அல்லது ஹர்திக் பாண்டியாவோ இன்னும் வாய் திறக்காத நிலையில் மும்பை அணியின் ஆஸ்தான வீரர்களான பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவின் சமூகவலைதளப்பக்கங்கள் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் சங்கடத்தினை ஏற்படுத்தியுள்ளது. 


அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் இதயம் உடைந்தது போன்ற எமோஜியை ஸ்டோரியாகவும் போஸ்டாகவும் பதிவுட்டுள்ளார்.


இவர்களின் இந்த பதிவு மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை உண்டாக்கியுள்ளது. அதாவது, மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவுக்கு துரோகம் இழைத்து விட்டது. மும்பை அணிக்காக இரண்டு முறை ரோஹித் சர்மா தனது தலைமையில் கோப்பையை வென்று கொடுத்தபோது மற்ற அணிகள் எல்லாம் அவரை தங்களது அணிக்கு அழைத்தனர். குறிப்பாக ஒரு சில அணிகள் ஏலத்தொகை மற்றும் கூடுதல் தொகை வழங்கவும் தயாராக இருந்தது.




ஆனால் இவற்றையெல்லாம், கொஞ்சம் கூட மதிக்காத ரோஹித் சர்மா மும்பை அணியை தனது அணியாக கருதி செயல்பட்டது மட்டும் இல்லாமல் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்குதிலும் கவனமாக இருந்தார். அப்படி ரோகித் சர்மாவால் அடையாளம் காணப்பட்டு, தொடர்ந்து அணியில் விளையாட வாய்ப்பளிக்கப்பட்டது மட்டும் இல்லாமல் ஊக்குவிக்கப்பட்டு அந்த வீரர்களை கிரிக்கெட் உலகில் நட்சத்திரமாக ஜொலித்த விரர்கள் இன்றைக்கு இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டு உள்ளனர். 


அவர்களில் பும்ரா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், திலக் வர்மா, ராகுல் சஹார், குர்னால் பாண்டியா இவர்கள் வரிசையில் இடம் பிடித்தவர்தான் ஹர்திக் பாண்டியாவும்.  இவர்கள் அனைவரும் மும்பை அணிக்காக விளையாடிய வீரர்கள் மட்டும் இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணிக்காவும் விளையாடியவர்களும் கூட. குஜராத் அணியில் இருந்து மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா ட்ரேட் செய்யப்பட்டபோது பும்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “அமைதியை விடவும் சிறந்த பதில் எதுவும் இல்லை” என பொருள் படும்படியான ஸ்டோரியை வைத்திருந்தார்.


மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா மீண்டும் வந்ததை பும்ரா, சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது ஹர்திக் பாண்டியா அளித்த பேட்டிதான்.




அந்த பேட்டியில் ஹர்திக், “சென்னை அணியின் யுக்தியும் மும்பை அணியின் யுக்தியும் வெவ்வேறானது. சென்னை அணி தன்னிடம் இருக்கும் வீரர்களுக்கு அணிக்குள் நல்ல சூழலை உருவாக்கி அவர்களைக் கொண்டு விளையாடி கோப்பையை வெல்லும். மும்பை அணி தனது அணிக்கு உலகின் தலைசிறந்த வீரர்களை வாங்கி அவர்கள் மூலம் கோப்பையை வெல்வது” என குறிப்பிட்டு இருந்தார்.


இது மும்பை அணியின் ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் அணியில் இருந்த பல வீரர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி பேசிய ஹர்திக் பாண்டியாவை அணியில் சேர்த்தது மட்டும் இல்லாமல் அவரை கேப்டனாக நியமித்துள்ளது அணிக்குள் இருக்கும் வீரர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் மினி ஏலத்தின் போது மும்பை அணியில் இருந்து முக்கிய வீரர்கள் விலக முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.