ஐ.பி.எல். தொடரில் ஜாம்பவான் அணிகளில் ஒன்றாகவும், கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட அணியாகவும் திகழ்வது மும்பை இந்தியன்ஸ் அணி ஆகும். 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 3 சீசன்களாக மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.


புதிய கேப்டன்:


இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி அவர்களது நட்சத்திர ப்ளேயரான ஹர்திக் பாண்ட்யாவை மீண்டும் குஜராத் அணியில் இருந்து மும்பை அணிக்கே அழைத்துக் கொண்டுள்ளது. மும்பை அணிக்கே அழைத்துக் கொள்ளப்பட்டுள்ள ஹர்திக் பாண்ட்யாவிற்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கேப்டன் பதவியையும் அளித்துள்ளது.


5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த ரோகித்சர்மா இருக்கும்போது, அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்திருப்பது ரசிகர்கள் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தினாலும் இளம் கேப்டனான ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மும்பையின் தூண்:


இன்று அணிக்கு திரும்ப அழைத்து கேப்டன் மகுடத்தை ஹர்திக் பாண்ட்யாவிற்கு சூடி அழகுபார்க்கும் மும்பை அணிதான், 3 ஆண்டுகளுக்கு முன்பு அணியில் இருந்து கழட்டிவிட்டது. அப்போது, பாண்ட்யா இருந்த ஃபார்ம் மிகவும் கவலைக்குரிய வகையில்தான் இருந்தது. ஆட்டத்தின் போக்கை எந்த சூழலிலும் மாற்றும் தன்மை கொண்ட ஒரு ஆல்ரவுண்டர் ஹர்திக்பாண்ட்யா ஆவார்.


அவரது அபாரமான பேட்டிங் மற்றும் பவுலிங்கால் மும்பை இந்தியன்ஸ் அணி பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 30 வயதான ஹர்திக் பாண்ட்யா முதன்முறையாக ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்காகத்தான் களமிறங்கினார். 2015ம் ஆண்டு ஐ.பி.எல், தொடரில் பெங்களூர் அணிக்கு எதிராக களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா அந்த போட்டியில் 6 பந்துகளில் 2 சிக்ஸருடன் 16 ரன்கள் எடுத்தார்.


மறக்க முடியாத இன்னிங்ஸ்:


மொத்தம் 123 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடியுள்ள ஹர்திக் பாண்ட்யா கடந்த 2 சீசன்கள் தவிர, 2015ம் ஆண்டு முதல் ஆடிய அத்தனை ஐ.பி.எல். போட்டிகளும் மும்பை அணிக்காக மட்டுமே ஆகும். மிடில் ஆர்டரில் பேட்டிங்கில் அசத்திய ஹர்திக் பாண்ட்யா அப்போதைய மும்பை அணியில் பும்ரா, போல்ட், பொல்லார்ட் ஆகியோருடன் சேர்ந்து பவுலிங்கிலும் பட்டையை கிளப்பினார்.


123 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடியுள்ள ஹர்திக் பாண்ட்யா இதுவரை 2 ஆயிரத்து 309 ரன்களையும், 53 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதில், 10 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 91 ரன்களை விளாசியுள்ளார். 2019ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 233 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோகித், டி காக், சூர்யகுமார் யாதவ் சொதப்ப ஹர்திக் பாண்ட்யா 34 பந்துகளில் 6 பவுண்டரி 9 சிக்ஸருடன் 91 ரன்கள் விளாசி எதிரணியை மிரள வைத்தார். அந்த போட்டியில் மும்பை தோற்றாலும் ஹர்திக் பாண்ட்யா ஆடிய ருத்ரதாண்டவம் இன்றுவரை மறக்க முடியாதது.


கழட்டிவிட்ட மும்பை இந்தியன்ஸ்:


அப்படி மும்பை அணிக்காக பல போட்டிகளில் ஆட்டத்தையே மாற்றித்தந்த ஹர்திக்பாண்ட்யா மோசமான பேட்டிங் மற்றும் பவுலிங் காரணமாக அவரை 2022ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் இருந்து அவரை மும்பை அணி கழட்டிவிட்டது. அவரை அந்த முறை புதியதாக ஐ.பி.எல். தொடருக்கு வந்த குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது.


ஒவ்வொரு அணியில் இருந்தும் கழட்டிவிடப்பட்ட வீரர்களால் உருவாக்கப்பட்ட குஜராத் அணி தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர் என பல அணிகளை தோற்கடித்த அந்த சீசனில் அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. முதன்முறை ஐ.பி.எல். தொடரிலே அதுவும் ஒவ்வொரு அணியில் இருந்தும் கழட்டிவிடப்பட்டவர்களை கொண்டு உருவாக்கப்பட்ட குஜராத் அணியை கண்டு மற்ற அணிகள் மிரண்டு போனது என்றே சொல்லலாம்.


இன்று மகுடம்:


2022ம் ஆண்டு மட்டுமின்றி, நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். தொடரிலும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி சென்னை அணிக்கு கடைசி பந்து வரை பீதியை கிளப்பியது. சாம்பியன் பட்டத்தையும், ரன்னர் அப் பட்டத்தை கேப்டனாக தன்னுடைய முதல் இரண்டு சீசனிலே அசத்திய ஹர்திக் பாண்ட்யாவை மீண்டும் மகுடத்திற்காக மும்பை அணி தற்போது அழைத்துள்ளது.


ரோகித்சர்மா தலைமையில் உருவாக்கப்பட்ட ஒரு வீரர், தோனி மற்றும் விராட் கோலி தலைமையில் ஆடிய ஒரு வீரரான ஹர்திக் பாண்ட்யா 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 6வது முறை சாம்பியன் பட்டத்தை பெற்றுத்தருவாரா? என்பது அவரது ரசிகர்களுக்கும், மும்பை அணியின் ரசிகர்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.