IPL Auction 2026 Live Streaming: ஐபிஎல் போட்டியின் 2026ம் ஆண்டு எடிஷனுக்கான மினி ஏலத்தின் மூலம், அதிகபட்சமாக 77 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஐபிஎல் 2026 மினி ஏலம்:
ஐபிஎல் போட்டியின் 2026 எடிஷனுக்கு முன்பாக அணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு ஏதுவாக, வீரர்களுக்கான மினி ஏலம் இன்று நடைபெறுகிறது. ஐபிஎல் விதிகளின்படி , ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 25 வீரர்களை ஒப்பந்தம் செய்யலாம். அதில் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கை எட்டுக்குக் குறைவாக இருக்க வேண்டும். அந்த வகையில் காலியாக உள்ள இடங்கள் தான் இந்த மூலம் நிரப்பப்பட உள்ளன. அபுதாபியில் உள்ள எதிஹாட் அரங்கில் நடைபெறும் இந்த ஏலமானது, இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இதன் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
வீரர்களின் பட்டியல்:
மினி ஏலத்திற்கு முன்பாக விடுவிக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், 10 அணிகளும் சேர்த்து அதிகபட்சமாக 77 இடங்களை நிரப்ப வேண்டிய சூழலில் உள்ளன. இதில் 31 வெளிநாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க தங்களது பெயர்களை முன்பதிவு செய்த நிலையில், 246 இந்தியர்கள் மற்றும் 113 வெளிநாட்டு வீரர்கள் மொத்தம் 359 பேர் ஏலச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். வீரர்களுக்கு அதிகபட்ச அடிப்படை விலை ரூ.2 கோடியாகவும், குறைந்தபட்ச அடிப்படை விலை ரூ.40 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் ரைட்-டு-மேட்ச் (RTM) போன்ற ஆப்ஷன்களும் வழங்கப்படாது.
அணிகளிடம் கைவசம் உள்ள தொகை:
இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா அணி அதிகபட்சமாக, இந்த ஏலத்தின் மூலம் 13 இடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. கடந்த தொடரின் மோசமான செயல்பாடு காரணமாக பெரும்பாலான வீரர்களை ஏலத்திற்கு முன்பாக அந்த அணி விடுவித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த அணி மட்டும் ரூ.64.3 கோடியை கைவசம் வைத்துள்ளது. தொடர்ந்து சென்னை அணி ரூ.43.40 கோடியும், ஐதராபாத் அணி ரூ.25.50 கோடியையும் கைவசம் கொண்டுள்ளன. குறைந்தபட்சமாக மும்பை அணி சுமார் 2.75 கோடி ரூபாயுடன் ஏலத்திற்குள் நுழைகிறது. 2026 ஐபிஎல் ஏலத்தில் அனைத்து அணிகளிடமும் சேர்த்து ₹237.55 கோடி கைவசம் உள்ளது.
வீரர்களுக்கான விலை வரம்பு:
வீரர்கள் பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள், ஆல்-ரவுண்டர்கள் மற்றும் விக்கெட் கீப்பர்கள், சர்வதேச போட்டிகளில் அறிமுகமானவர்கள் அல்லது சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகாத வீரர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு செட்டிற்கும் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன, செட் 1, கேமரூன் கிரீன், டேவிட் மில்லர் மற்றும் பிருத்வி ஷா போன்ற வீரர்களை உள்ளடக்கியது,
இந்த ஏலத்தின் மூலம் வெளிநாட்டு வீரர்களுக்கான அதிகபட்ச விலை வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி தக்கவைக்கப்பட்டதற்கு பயன்படுத்தப்பட்ட ரூ.18 கோடி தொடங்கி, கடந்த ஏலத்தில் அதிகபட்சமாக வழங்கப்பட்ட ரூ.27 கோடிக்குள் வெளிநாட்டு வீரருக்காக ஒரு அணி செலவழிக்கலாம். கடந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட், லக்னோ அணியால் 27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சாம்சன் போன்ற வீரர்கள் ரூ.18 கோடிக்கு தக்கவைக்கப்பட்டு சென்னைக்கு ட்ரேட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.