நடப்பு ஐபிஎல் தொடர் மிகவும் சுவாரஸ்யமான கட்டத்தினை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் முடியும் தருவாயில் இருப்பதால் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற, ஏற்கனவே வெளியேறிய மும்பை, பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளைத் தவிர மற்ற அணிகள் தீவிரமாக போராடி வருகின்றது. இதில் கொல்கத்தா அணி மட்டும் 19 புள்ளிகளை எட்டி முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. 


ப்ளேஆஃப் சுற்று


இந்நிலையில் பெரும்பாலான் ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் உள்ள பேச்சு என்றால் வரும் 18ஆம் தேதி நடைபெறும் போட்டியில் வெல்லபோவது யார்? ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார் என்பதான கேள்வியாக உள்ளது. 18ஆம் தேதி நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது. 


இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பினை பிரகாசப்படுத்திக் கொள்ளும். அதேநேரத்தில் பெங்களூரு அணி சென்னை அணி நிர்ணயம் செய்யும் இலக்கினை பெங்களூரு அணி 18.1 ஓவரில் எட்ட வேண்டும் அல்லது சென்னை அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். இவ்வாறு செய்தால் பெங்களூரு அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகிவிடும். 


CSK, RCB என இரு அணிகளும் ப்ளேஆஃப் சுற்றுக்கு...


இந்நிலையில் இரு அணிகளும் ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்றால் நம்ப முடிகின்றதா? ஆமாம், சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெங்களூரு அணி சென்னை அணியின் ரன் ரேட்டினை பெரிதளவு பாதிப்பினை ஏற்படுத்தாமல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும். 


மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனக்கு மீதமுள்ள இரண்டு போட்டிகளில் படுதோல்வியைச் சந்திக்க வேண்டும். அதாவது சன்ரைசர்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிராக படுதோல்வியைச் சந்தித்தால், தற்போது 14 புள்ளிகளில் இருக்கும் ஹைதராபாத் அணி தொடர்ந்து அதே புள்ளிக்கணக்கில் நீடிப்பதுடன், படுதோல்வியினால் ஹைதராபாத் அணியின் ரன்ரேட் மைனஸ்க்குச் செல்லும். இதன் மூலம் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். 


அதேபோல், புள்ளிப்பட்டியலில் தற்போது ஏழாவது இடத்தில் உள்ள லக்னோ அணி தனக்கு இன்று அதாவது மே 14ஆம் தேதி நடைபெறவுள்ள டெல்லிக்கு எதிரான போட்டியிலும்,  மே 17ஆம் தேதி நடைபெறவுள்ள மும்பைக்கு எதிரான போட்டியில் ரன்ரேட்டில் தாக்கத்தை ஏற்படுத்தாத  தோல்வியை எட்டினால் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் கட்டாயம் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதுடன், இரு அணிகளும் எலிமினேட்டர் சுற்றில் அகமதாபாத் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தும்.