ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். முந்தைய சீசனில் மயங்க் அகர்வால் கேப்டனாக செயல்பட்டார். இந்நிலையில், அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.


தவானை கேப்டனாக தேர்வு செய்ய புதன்கிழமையன்று நடைபெற்ற போர்டு மீட்டிங்கில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ட்ரெவர் பெய்லிஸும் ஆதரவு அளித்தார்.






மயங்க் அகர்வால் - அர்ஷ்தீப் சிங் ஆகியோரை மெகா ஏலத்திற்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் தக்கவைத்துக் கொண்டது. அவர்கள் வாங்கிய முதல் வீரர் தவான் தான்.






கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் போட்டித் தொடர்களில் ஒன்றாக ஐ.பி.எல். திகழ்கிறது. டி20 போட்டித் திருவிழாவான இந்த ஐ.பி.எல். போட்டித் தொடரில் நடப்பாண்டில் 10 அணிகள் களமிறங்கின. அறிமுக அணியாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் கோப்பையை வென்று அசத்தியது.


இந்த நிலையில், அடுத்தாண்டு நடைபெறும் அதாவது 2023ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளுக்கான ஏலம் வரும் டிசம்பர் மாதம் 16-ந் தேதி நடைபெற உள்ளது. குட்டி ஏலமாக நடைபெறும் இந்த ஏலத்தில் எந்தெந்த அணியினர் தாங்கள் தக்க வைக்க விரும்பும் வீரர்களை தக்க வைக்கிறார்களோ, அவர்கள் தவிர அந்த அணியினரால் விடுவிக்கப்பட்ட வீரர்களை வைத்து ஏலம் நடத்தப்படும்.


ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தாங்கள் தக்க வைக்கும் வீரர்கள் யார்? யார்? எனும் பட்டியலை வரும் 16-ந் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என ஏற்கனவே பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. இதனால், ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் தாங்கள் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியல் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  


ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் உள்ள 15 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம். 10 வீரர்களை விடுவித்துக் கொள்ளலாம். கடந்தாண்டு ஐ.பி.எல். தொடரில் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 18 வீரர்களையும், அதிகபட்சம் 22 வீரர்களையும் ஏலத்தில் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


வரும் டிசம்பர் 16-ந் தேதி நடைபெற உள்ள ஏலத்தில் சுமார் 650 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய அணிகளில் இருந்து பல நட்சத்திர வீரர்களும் வேறு அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.