Faf Du Plessis: எங்களிடம் ப்ளேஆஃப் செல்வதற்கான அணி இல்லை என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பாஃப் டூ பிளசிஸ் புலம்பியுள்ளார். 


16வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் களமிறங்கிய இந்த தொடரில் மொத்தம் 70 லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு அணிக்கும் 14 லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. லீக் போட்டிகளில் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் இருந்த அணிகள் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறின. 


இந்த தொடரில் தான், இதற்கு முன்னர் நடைபெற்ற தொடரில் நடக்காத ஒரு நிகழ்வு நடைபெற்றது. 70 சதவீத லீக் போட்டிகள் முடிவடைந்த பின்னரும் அனைத்து அணிகளுக்கும் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இருந்தது. ப்ளேஆஃப் சுற்றுக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ஆனால் அந்த அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. 14 லீக் போட்டிகளில் விளையாடி, 7 போட்டிகளில் வெற்றி பெற்றது. நேற்றைய (மே, 21) போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக பெங்களூரு அணி வெற்றி பெற்றிருந்தால் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும். 


பெங்களூரு அணியின் இந்த தோல்விக்கு முக்கிய காரணம், பெங்களூரு அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தான். பெங்களூரு அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான கோலி, டூ பிளசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் தவிர இந்த சீசனில் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடிய பேட்ஸ்மேன்கள் என யாரும் இல்லை. குறிப்பாக தினேஷ் கார்த்திக் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களும் சொதப்பினர். பந்து வீச்சிலும், முகமது சிராஜ் தவிர வேறு யாரும் சிறப்பாக செயல்படாததும் ஒரு முக்கிய காரணம். 


குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியோடு சேர்ந்து ப்ளேஆஃப் வாய்ப்பினையும் இழந்த பெங்களூரு அணியின் கேப்டன் பாஃப் டூ பிளசிஸ் கூறுகையில், எங்களின் வருத்தத்தை வெளிப்படுத்த வார்த்தை இல்லை. நாங்கள் இறுதிவரை போராடினோம். ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி.  எங்கள் அணியில் மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடக்கூடிய வீரர்கள் இல்லை. மேலும், கடந்த சீசனில் அணிக்கு சிறந்த பங்களிப்பை அளித்த தினேஷ் கார்த்திக்கால் இந்த சீசனில் சிறப்பாக செயல்பட முடியவில்லை என கூறியுள்ளார்.