IPL 2023: ஐபிஎல் தொடரில் இன்று (ஏப்ரல் 18) ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் பந்து வீச முடிவு செய்தார். ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி  மைதானத்தில் நடைபெற்ற பெரும்பாலான போட்டிகளில் ஹைதராபாத் அணி வென்றுள்ளது. அதேநேரத்தில் இந்த மைதானத்தில் மும்பை அணி ஐபிஎல் தொடரின் இரண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. 


பேட்டிங்கிற்கு சாதகமான மைதானத்தில் களமிறங்கிய மும்பை அணியின் பேட்டிங்கினை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விக்கெட் கீப்பர் மற்றும் இடது கை பேட்ஸ்மேன் இஷான் கிஷன் தொடங்கினர். முதல் ஓவரில் ஒரு பவுண்டரியை தட்டிவிட்ட ரோகித் சர்மா அதன் பின்னர் அதிரடிகாட்டத் தொடங்கினார். கிடைத்த பந்துகளை லாவகமாக பவுண்டரிக்கு தட்டிவிட்ட அவர், தமிழ்நாட்டினைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் வீசிய ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை பறக்கவிட்டு அசத்தினார். இதனால் அணியின் ரன் அதிகரித்தது. ஒரு முனையில் ரோகித் சர்மா பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினால், இஷான் கிஷன் சிக்ஸருக்கு விரட்டுவதில் குறியாக இருந்தார். அதிரடியாக ஆடிவந்த இந்த ஜோடியை ஐந்தாவது ஓவரை வீசவந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் தனது பந்து வீச்சில் பிரித்தார். சிறப்பாக ஆடி வந்த ரோகித் சர்மா 18 பந்தில் 28 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இவர் 6 பவுண்டரிகளை விளாசினார். 


அதன் பின்னர் கைகோர்த்த கேமரூன் கிரீன் நிதானமாக ஆட பவர்ப்ளே முடிவில் 50 ரன்களை எட்டியது. அதன் பின்னர் இருவரும் நிதானமாக ஆடி வந்தனர். இவர்களை பிரிக்க திட்டம் தீட்டிய மார்க்ரம், மார்க்ரோ மார்கோ ஜென்சனை பந்து வீசும்படி கூறீனார். 12வது ஓவரை வீசிய அவர் அந்த ஓவரின் முதல் பந்தில் இஷான் கிஷனையும் ஐந்தாவது பந்தில் சூர்யகுமார் யாதவையும் வீழ்த்தினார். இதனால், மும்பை அணி ஒரே ஓவருக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் என ஹைதராபாத் அணி நினைத்தது. ஆனால் அடுத்து களமிறங்கிய திலக் வர்மா ஹைதரபாத்தை சொந்த ஊராகக் கொண்டவர் என்பதால், சிக்ஸர்களை பறகக்விட்டார். மொத்தம் 17 பந்துகளை எதிர்கொண்ட திலக் 37 ரன்கள் எடுத்தார். திலக் வர்மாவின் அதிரடி ஆட்டத்தால் மும்பை அணி 150 ரன்களை எட்டியது. 


அதன் பின்னர் வந்த டிம் டேவிட் கிரீனுடன் இணைந்து மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். களமிறங்கியபோது நிதானமாக ஆடிய கேமரூன் கிரீன் இறுதியில் அதிரடியாக ஆடினார். இதனால் அவர் அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடினார். நடராஜன் ஓவரில் மூன்று பவுண்டரி ஒரு சிக்ஸர் விளாசினார்.  இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 192 ரன்கள் சேர்த்தது.