ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்


பஞ்சாப்


டெல்லி கேப்பிடல்ஸ்


15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்க உள்ளது. இதற்காக ஐ.பி.எல். ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை, மும்பை, ராஜஸ்தான், கொல்கத்தா, ஹைதராபாத் அணிகள் ஐ.பி.எல். கோப்பையை முத்தமிட்டுள்ளன.


ஆனால், முதல் முறையாக எப்படியாவது ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று 2008ம் ஆண்டு முதல் அதாவது சுமார் 14 ஆண்டுகளாக மூன்று அணிகள் மட்டும் தவம் கிடக்கின்றன.



  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் :


ஒவ்வொரு ஐ.பி.எல். போட்டியின்போதும் சென்னை மற்றும் மும்பை அணிகள் மீது எந்தளவு எதிர்பார்ப்பு ஏற்படுமோ, அதே அளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அணி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி. அதற்கு காரணம் விராட்கோலி எனும் தனி ஒருவன். 2008ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கிய அணிகளில் பெங்களூர் அணியும் ஒன்று. அந்த அணியின் முதல் கேப்டனாக இப்போதைய இந்திய அணியின் பயிற்சியாளரும், முன்னாள் இந்திய கேப்டனுமான ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார்.


டிராவிட்டிற்கு பிறகு அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி ஆகியோர் கேப்டனாக பொறுப்பு வகித்தனர். 2013ம் ஆண்டு முதன்முறையாக விராட்கோலி பெங்களூர் அணிக்கு கேப்டனாக பொறுப்பு ஏற்றார். அவர் பொறுப்பேற்றது முதல் பெங்களூர் அணி மீது எதிர்பார்ப்பு எகிறியது. 2009ம் ஆண்டு கும்ப்ளே தலைமையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பெங்களூர், 2011ம் ஆண்டு வெட்டோரி தலைமையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 2016ம் ஆண்டு தொடரில் கெயில், கோலி, டிவிலியர்ஸ் கூட்டணியுடன் மிகுந்த பலம்வாய்ந்த அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பெங்களூர் எதிர்பாராத விதமாக தோல்வி அடைந்தது. மூன்று முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் ஒரு முறைகூட கோப்பையை கைப்பற்றாததும், விராட்கோலி சுமார் 9 ஆண்டுகள் கேப்டனாக பொறுப்பு வகித்தும் ஒரு முறை கூட ஐ.பி.எல். சாம்பியன் ஆகாததும் பெங்களூர் அணிக்கும், அதன் ரசிகர்களுக்கும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



  • பஞ்சாப் கிங்ஸ் :


பெங்களூர் அணிக்கு அடுத்தபடியாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அணி பஞ்சாப். பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தாவிற்காகவே பஞ்சாப் அணிக்கு ஆதரவு அளிப்போர் அதிகம். அதையும் கடந்து சிறந்த வீரர்களை கொண்டே ஒவ்வொரு ஐ.பி.எல். போட்டியிலும் பஞ்சாப் களமிறங்குகிறது. ஆனாலும், 2008ம் ஆண்டு முதல் ஆடி வரும் பஞ்சாப் அணியால் ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. அதிகபட்சமாக 2014ம் ஆண்டு ஜார்ஜ் பெய்லி தலைமையில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 199 ரன்களை குவித்தது. விருத்திமான் சஹா அதிரடி சதமும், மனன் வோரா அரைசதமும் விளாசினார். ஆனாலும், கொல்கத்தா அணி மணீஷ்பாண்டே அதிரடியால் 3 பந்துகள் மீதம் வைத்து கோப்பையை கைப்பற்றியது. யுவராஜ்சிங், சேவாக், கும்ப்ளே, மேக்ஸ்வேல், டேவிட் மில்லர் என்று பெரிய பட்டாளங்களே ஆடியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்ற பெயரை பஞ்சாப் கிங்ஸ் என்று மாற்றியும் பஞ்சாபிற்கு யோகம் இன்னும் கைகூடவில்லை.



  • டெல்லி கேபிடல்ஸ் :


ஐ.பி.எல். போட்டியின் ஒவ்வொரு தொடரிலுமே எப்போதும் இளமையான அணியாகவே வலம் வரும் அணி டெல்லி அணி. மிகவும் இளம் வீரர்களை கொண்டே இவர்களது அணி எப்போதும் கட்டமைக்கப்படுகிறது. பெங்களூர், பஞ்சாப் அணிகளை போலவே 2008ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். தொடரில் ஆடி வரும் டெல்லி அணி 2020ம் ஆண்டுதான் ஐ.பி.எல். போட்டியில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கே முன்னேறியது. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய டெல்லி, பலம் மிகுந்த மும்பையிடம் பரிதாபமாக தோல்வியடைந்தது. கடந்த சீசனிலும் மிரட்டலாகவே டெல்லி ஆடினாலும், ப்ளே ஆப் சுற்று வரை மட்டுமே வர முடிந்தது.


சுமார் 14 ஆண்டுகளாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றத் துடிக்கும் பெங்களூர் அணிக்கு புதிய கேப்டனான டுப்ளிசிஸ், பஞ்சாப் அணியின் புதிய கேப்டன் மயங்க் அகர்வால், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஆகியோர் இந்த முறையாவது சோக வரலாற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம். இவர்களுடன் முதன்முறையாக கோப்பையை கைப்பற்ற லக்னோ மற்றும் குஜராத் அணிகளும் களமிறங்கியுள்ளன.