வெஸ்ட் இண்டீஸில் தற்போது யு-19 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தென்னாப்பிரிக்கா அணியில் டிவால்ட் ப்ரேவிஸ் என்ற இளம் வீரர் மிகவும் அட்டகாசமாக விளையாடி வருகிறார். அவர் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபிடிவில்லியர்ஸ் போன்று விளையாடி வருகிறார். இதன்காரணமாக இவரை பலரும் ‘பேபி ஏபி’ என்று செல்லமாக அழைத்து வருகின்றனர். இந்த உலகக் கோப்பை தொடரில் 4 போட்டிகளில் 362 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார். அத்துடன் 3 அரைசதம் மற்றும் ஒரு சதம் விளாசியுள்ளார். 


இந்நிலையில் அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் ஐபிஎல் தொடர் தொடர்பாகவும் ஏபிடிவில்லியரஸ் தொடர்பாகவும் பேசியுள்ளார். அதில், “தென்னாப்பிரிக்கா அணியில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய  நீண்ட நாள் கனவு. அதேபோல் ஐபிஎல் தொடர் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்தத் தொடரில் நான் ஆர்சிபி அணிக்காக தான் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். விராட் கோலி மற்றும் என்னுடைய ரோல் மாடல் ஏபிடிவில்லியர்ஸ் போல் அந்த அணியில் களமிறங்க நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார். 






ஏற்கெனவே தென்னாப்பிரிக்கா அணியில் இவர் டிவில்லியர்ஸ் போல் விளையாடும் வீடியோ இணையத்தில் வேகமாக வைரலானது. அதைத் தொடர்ந்து தற்போது இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது. ஏபிடிவில்லியர்ஸ் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடும் போது 17 நம்பர் ஜெர்ஸியை அணிந்து விளையாடினார். தற்போது யு-19 உலகக் கோப்பை தொடரில் ப்ரேவிஸூம் 17ஆம் நம்பர் ஜெர்ஸியை அணிந்து விளையாடுகிறார். இந்த 17ஆம் நம்பர் ஜெர்ஸியை அணிவதற்கு அவர் ஏபிடிவில்லியர்ஸ் இடம் அனுமதி வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 






ஐபிஎல் தொடரின் மெகா வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்குமுன்பாக இந்த இளம் வீரரின் கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. ஏபிடிவில்லியர்ஸ் ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வு அறிவித்ததால் ப்ரேவிஸ் ஐபிஎல் தொடரில் களமிறங்கினால் பேபி ஏபிடியின் ஆட்டத்தை காணும் வாய்ப்பு கிடைக்கும். 


மேலும் படிக்க: 2022 ஐபிஎல் தொடருக்கு சிஎஸ்கேவின் கேப்டன் யார்?- தோனியா? ஜடேஜாவா?