பஞ்சாப்- ராஜஸ்தான் அணிகள் மோதிய விறுவிறுப்பான போட்டியில், 185 ரன் இலக்கை சேஸ் செய்த பஞ்சாப் அணி, போட்டியை இழந்தது. 2 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்று ராஜஸ்தான் அசத்தல். 


ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2021 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில், இன்று பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் மோதின. இரு அணிகளும் இதற்கு முன்பு துபாய் மைதானத்தில் நேருக்கு நேர் மோதியதில்லை. இன்று விளையாடப்போகும் போட்டியே, துபாயில் இரு அணிகளும் மோதிக்கொள்ளும் முதல் போட்டியாகும். இந்த போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் அணி.


முதல் இன்னிங்ஸின் இரண்டாம் பாதியிலேயே வெற்றியை துரத்த ஆரம்பித்த பஞ்சாப்


185 ரன் இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு, ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ராகுல், மயாங்க் அகர்வால் சிறப்பாக விளையாடினாலும், முதல் இன்னிங்ஸின் கடைசி 10 ஓவர்களை வீசும்போதே வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பஞ்சாப் அணி வீரர்கள் விளையாடினர். முதல் இன்னிங்ஸில், விக்கெட்டுகளும் விழ, ரன்களும் அடிக்க இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் சிறப்பாகவே விளையாடினர். 200 ரன்களை எட்ட விடாமல் தடுத்ததில் பஞ்சாப் அணி வீரர்கள் மும்முரமாக இருந்தனர். அது பலனளிக்க, 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ராஜஸ்தான் 185 ரன்கள் எடுத்தது. 


ராகுல் (49), மயாங்க் (69) ஆகியோரின் சிறப்பான தொடக்கம் பஞ்சாப் அணிக்கு கைக்கொடுத்தது. இந்த போட்டியில் விளையாடும்போது ஐபிஎல் தொடரில், ராகுல் 3,000 ரன்களை கடந்தார். 120 ரன்கள் வரை விக்கெட் ஏதும் விழாமல் இருந்ததால், அடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் குறைவாகவே இருந்தது. எனினும், ராகுல் விக்கெட் சரிந்து அடுத்து மயாங்க் அகர்வாலும் வெளியேற, மார்க்கரம் மற்றும் பூரன் களத்தில் இருந்தனர். 






கடைசி ஓவரில் வெற்றியை தட்டிப் பறித்த ராஜஸ்தான்:


கிட்டத்தட்ட இரண்டு இன்னிங்ஸ்களும் ஒரே மாதிரி இருந்தன. நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்த்தனர். ஆனால், முதல் இன்னிங்ஸில் பஞ்சாப் அணி வீரர்கள் விக்கெட்டுகளை எடுத்தது போல, ராஜஸ்தான் அணி பந்துவீச்சாளர்களால் விக்கெட்டுகள் எடுக்க முடியவில்லை. 24 பந்துகளில் 32 ரன்கள் தேவை என்ற நிலையில், பஞ்சாப் நிதானமாக ஆடியது. கடைசி வரை விறுவிறுப்பாக சென்ற போட்டியில், கடைசி ஓவரில் கார்த்தில் தியாகி இரண்டு விக்கெட்டுகள் எடுத்து பஞ்சாப் அணி ரன் எடுக்க விடாமல் தடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸ் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய பஞ்சாப் அணிக்கு, கடைசி ஓவரில் டஃப் கொடுத்தது ராஜஸ்தான். இதனால், 2 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது ராஜஸ்தான்.


ராஜஸ்தான் பேட்டிங் ரீகேப்:


ஓப்பனிங் களமிறங்கிய எல்வின் லூயிஸ், யஷஸ்வி ஜேஸ்வால் முதல் 5 ஓவரில் அதிரடி காட்டினர். அடுத்தடுத்து பவுண்டர்களாக தெறிக்கவிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, யார் பந்துவீசினாலும் பவுண்டரிகள் அடித்தனர். 30 பந்துகளில் 50 ரன்கள் எட்டிய ராஜஸ்தானுக்கு, அர்ஷதீப் சிங் பந்துவீச்சில் தான் முதல் விக்கெட் விழுந்தது. சிறப்பாக விளையாடி வந்த எவின் லூயிஸ் விக்கெட்டை எடுத்து பஞ்சாப் அணிக்கு முதல் ப்ரேக் த்ரூ கொடுத்தார் அர்ஷதீப் சிங். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சாம்சன், 4 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார்.  


சாம்சனை அடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன், வந்து எதிர்கொண்ட சில பந்துகளை பவுண்டர்களுக்கு அனுப்பி ரன் சேர்த்தார். இதனால், அணியின் ஸ்கோர் உயர்ந்தது. 11 ஓவர்களின் 100 ரன்களை எட்டியது ராயல்ஸ். இதே ஃபார்மில் தொடர்ந்தால், ராயலஸ் 200 ரன்களை எட்டும் வாய்ப்பு உள்ளதால், விக்கெட் எடுக்க போராடினர் பஞ்சாப் கிங்ஸ். மீண்டும் ஒரு முறை அர்ஷப்தீப் சிங் மீட்பராக வந்தார். அதிரடியாக பேட்டிங் செய்து கொண்டிருந்த லியம் லிவிங்ஸ்டன் விக்கெட்டை எடுத்து ராயல்ஸ் ரன் வேட்டைக்கு மீண்டும் ஒரு ப்ரேக் கொடுத்தார்.


கவனிக்க வைத்த ஜேஸ்வால், லோம்ரார் 


சிறப்பாக விளையாடி வந்த இளம் வீரர் யஷஸ்வி ஜேஸ்வால், அரை சதம் கடப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டபோது 49 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து அவுட்டானார். எனினும் சிறப்பாக ஆடினார். 6 பவுண்டர்கள், 2 சிக்சர்கள் என 36 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து அவுட்டானார் ஜேஸ்வால். 


இன்றைய போட்டியில், ஜேஸ்வாலைப் போல மற்றொரு இளம் வீரர் அதிரடி காட்டினார். அவர்தான் மஹிபால் மோம்ரார். 4 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் என அதிரடி காட்டிய அவர் 17 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து கிரிக்கெட் வட்டாரத்தை கவனிக்க வைத்துள்ளார். இரு இளம் வீரர்களும் அரை சதம் அடித்திருக்க வேண்டியது, 40+ ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் கொடுத்து வெளியேறியது ஏமாற்றமே.