2021 ஐபிஎல் தொடரில், தற்போது புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் சென்னை இரண்டாவது இடத்திலும், 10 புள்ளிகளுடன் பெங்களூரு மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்நிலையில், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ஷார்ஜாவில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.


படிக்கல் - கோலி பார்ட்னர்ஷிப்:


ஓப்பனிங் களமிறங்கிய கோலி, படிக்கல் இணை 100 ரன்களுக்கு களத்தில் நின்றது. தொடக்கம் முதலே பவுண்டரிகளை பறக்கவிட்ட இரு வீரர்கள், 11.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டி வலுவான இலக்கை எட்டுவதற்கு அடித்தளம் போட்டனர். 6 பவுண்டரிகள், 1 சிக்சர்கள் என 41 பந்துகளில் 53 ரன் எடுத்த கோலி, 14வது ஓவர் வீச வந்த பிராவோவின் பந்தில் அவுட்டானார்.


14 ஓவர் வரை ஆர்சிபி ஆதிக்கம் செலுத்தியது. அட்டாக் மோடில் இருந்த பெங்களூரு அணியின் விக்கெட்டை எடுக்க சென்னை அணி திணறியது. இன்னிங்ஸின் இரண்டாம் பாதியிலேயே பிராவோ விக்கெட் எடுத்து பிரேக்-த்ரூ கொடுத்தார். கோலியை அடுத்து களமிறங்கிய ஏபிடி வில்லியர்ஸ் (12), வந்த வேகத்தில் ஒரு சிக்சர் அடித்துவிட்டு தாகூர் ஓவரில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.






வேகமாக ரன் சேர்ந்தது போல இருந்த நிலையில், கடைசி 5 ஓவர்களில் சென்னை அணி பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தியது. ஏபிடியை தொடர்ந்து படிக்கல், சிங்கப்பூர் டிம் டேவிட், மேக்ஸ்வெல், ஹர்ஷல் பட்டேல் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய, 200-ஐ எட்டும் என எதிர்ப்பார்க்கபப்ட்ட ஸ்கோர் 156-ல் முடித்து கொண்டது ஆர்சிபி.


சென்னை அணியின் பவுலிங்கைப் பொருத்தவரை, பிராவோ 3 விக்கெட்டுகளும், தாகூர் 2 விக்கெட்டுகளும், சஹார் 1 விக்கெட்டும் எடுத்தனர். 20ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது பெங்களூரு அணி.


வரலாறு என்ன சொல்லுது?


இரு அணிகளுக்குமே இந்த சீசனின் முதல் பாதி சிறப்பாக அமைந்திருந்ததால், இரண்டாம் பாதியிலும் சிறப்பாக விளையாடி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொள்ள இரு அணிகளும் போராடும்.


கடைசி சீசனில், ஷார்ஜாவில் நடைபெற்ற மூன்று போட்டிகளையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றுள்ளதால், இந்த தொடர் தோல்விக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்க போராடு. பெங்களூரு அணியை பொருத்தவரை, மூன்றில் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால், பெரிய இலக்கை சேஸ் செய்யப்போகும் சென்னை அணி, வெற்றிகரமாக இலக்கை எட்டி போட்டியை வெல்லுமா என்பதை அடுத்த இன்னிங்ஸில் பார்ப்போம்.