ஐ.பி.எல். தொடரின் 41-வது ஆட்டத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்குநேர் மோத உள்ளன. 6 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளதால் அந்த அணிக்கு இந்தா போட்டி வாழ்வா? சாவா? போட்டி ஆகும். அதேபோல, புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியும் ப்ளே - ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொள்ள, இந்த போட்டியில் வெற்றி பெறுவது முக்கியமாகும்.  முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. 


அபு தாபியில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. பஞ்சாப் அணிக்கு ராகுலுடன், மந்தீப் சிங் ஓப்பனிங் களமிறங்கினார். பவர்ப்ளேவின் கடைசி ஓவர் வரை நின்ற இந்த இணையை பிரித்தார் க்ருணால் பாண்டியா. மந்தீப் சிங் வெளியேறியவுடன், கெய்ல் களமிறங்கினார். 


ராகுல் - கெய்ல் இணை ரன் சேர்க்கும் என மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்டபோது, ஒரே ஓவரில் போட்டியின் போக்கை மாற்றினார் பொல்லார்டு. அவர் வீசிய 7வது ஓவரின்போது முதலில் கெய்ல் கேட்ச் கொடுத்து வெளியேற, அடுத்து ராகுலும் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய பூரனும் 2 ரன்களுக்கு வெளியேற, பஞ்சாப் அணி ரன் சேர்க்க திணறியது. இந்த போட்டியில் விக்கெட்டுகளை எடுத்த, பொல்லார்டு டி-20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை எடுத்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். 






50 ரன் பார்ட்னர்ஷிப்:


மார்க்கரம் - ஹுடா இணை களத்தில் நின்று நிதானமாக ரன் சேர்த்தது. 50 ரன்களுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள், பஞ்சாப் அணியின் ஸ்கோரை 100-ஐ தொட வைத்தனர். கடைசி 5 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், மார்க்கரம் - ஹூடா இணை களத்தில் இருந்திருந்தால் ஸ்கோர் 150-ஐ எட்டி இருக்கும். ஆனால், ராகுல் சஹார் வீசிய 16-வது ஓவரில் 42 ரன்களுக்கு மார்க்கரம் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஹர்ப்ரீத் பிரர் களமிறங்கினார். மார்க்கரமை வெளியேற்றியது போல, பும்ரா வீசிய 19-வது ஓவரில் ஹூடாவும் வெளியேறினார். இதனால், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு, 135 ரன்கள் எடுத்தது. 


இரு அணிகளும் இதுவரை


இந்த தொடரின் முதல் பாதியில் நடைபெற்ற மோதலில் மும்பை அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான மோதலில் பஞ்சாப் அணி 7 முறை முதலில் பேட்டிங் செய்தும், மும்பை அணி 7 முறை முதலில் பேட்டிங் செய்தும் வெற்றி பெற்றுள்ளன. மும்பை அணி 7 முறை இரண்டாவது பேட்டிங் செய்தும், பஞ்சாப் அணி 8 முறை இரண்டாவது பேட்டிங் செய்தும் வெற்றி பெற்றுள்ளன.


இரு அணிகளும் இன்று மோதி கொள்ளும் அபுதாபியில் உள்ள ஷேக் சையத் மைதானத்தில் இதற்கு முன்பு ஒரு முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால், வெற்றிகரமாக சேஸிங் செய்து இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெறுமா என அடுத்த இன்னிங்ஸில் பார்ப்போம்.