ஐ.பி.எல். தொடரின் 50வது போட்டியில்  சென்னை அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.  முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர் முடிவிற்கு 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. 


முதல் இன்னிங்ஸின் பவர்ப்ளே முடிவில், 48/2 என்ற நிலையில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ், அடுத்தடுத்த ஓவர்களில் ரன் எடுக்க திணறியது. ஒன்பதாவது ஓவரில்  ராபின் உத்தப்பா அவுட்டாகி வெளியேறியவுடன் களமிறங்கினார் தோனி. ஒன்பதாவது ஓவரில் இருந்து கடைசி ஓவரில் விக்கெட் விழும் வரை களத்தில் இருந்த தோனி ரன் சேர்க்க திணறியது அவர் போதுமான ஃபார்மில் இல்லை என்பதை உறுதி செய்தது. 


டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக குறைவான இல்லை செட் செய்த சென்னை அணி, சேஸிங்கிலும் கோட்டைவிட்டது தோல்விக்கு வழிவகுத்தது. நேற்றைய போட்டியில் சிஎஸ்கே தவிர்த்திருக்க வேண்டிய மூன்று விஷயங்கள் இதோ.


1. ஜடேஜாவுக்கு பதில் தோனி களமிறங்கியது ஏன்?


ருதுராஜ், டுப்ளெசி, மொயின் அலி, உத்தப்பா என சென்னை அணியின் நான்காவது விக்கெட் சரிந்தது 9வது ஓவரில். அப்போது களத்தில் இருந்த ராயுடுவுடன் ஜோடி சேர ஜடேஜாவை கேப்டன் அனுப்பி வைப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டபோது தோனி களமிறங்கினார். அந்த இன்னிங்ஸில், 27 பந்துகளை எதிர்கொண்ட அவர், 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரு பவுண்டரியோ, சிக்ஸ்சரோ அடிக்கவில்லை. ராயுடு மட்டும் போராடி அரை சதம் கடந்தார். இதனால், அணியின் ஸ்கோர் சதத்தை கடந்தது. 


வழக்கமாக, சிஎஸ்கே சேஸிங்கில் இருக்கும்போது தானாகவே முன்வந்து பேட்டிங் களமிறங்கும் தோனி, நிறைய போட்டிகளில் தேவையான ரன்களை எட்டி அணியின் வெற்றிகளை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், நேற்றைய போட்டியில் ஜடேஜாவுக்கு பதில் தோனி களமிறங்கியதற்கு விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 84 ரன்கள் எடுத்துள்ளார், சராசரி 14, ஸ்ட்ரைக் ரேட் 97.67



முன்னொரு காலத்தில் இருந்த அதிரடி தோனி இப்போது இல்லையே என ரசிகர்கள் கவலை கொள்வதை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது நேற்றைய போட்டியில் தோனியின் ஆட்டம். வெறும் ஓப்பனர்களை மட்டுமே நம்பி இருக்கும் சென்னை அணி ப்ளே ஆஃப் செல்லும்போது இக்கட்டான சூழலில் யார் அணியை காப்பாற்றுவார்கள் என தோனிக்கு அச்சம் எழுந்திருக்கலாம். ஜடேஜா மட்டும் சிறப்பாக விளையாடுவது அணியின் ப்ளஸ், மிடில் ஆர்டர் சொதப்பல்கள் சிஎஸ்கேவின் மைனஸ்.


மொயின் அலி, ராயுடு அப்போதும் இப்போதுமாய் சிறப்பாக விளையாடுவதால், முழுமையாக ஓப்பனர்களை நம்பி களமிறங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது சிஎஸ்கே. இதனால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்பு லீக் போட்டிகளிலேயே சிஎஸ்கேவின் பேட்டிங் ஆர்டரை சோதித்து பார்க்க முடிவு எடுத்திருக்கலாம். அதனால், நேற்று அவர் களமிறங்கி இருக்கலாம். எனினும், தோனியாலும் கூட அவர் நினைக்கும் அளவிற்கு அணியின் பேட்டிங்கை தூக்கிப் பிடிக்க முடியவில்லை என்பது தோனிக்கே புரிந்திருக்கும். 


ஒரு ப்ளேயிங் லெவன் வெற்றி பெறுகிறது என்றால், அந்த அணியை அப்படியே வைத்து கொள்வது தோனியின் வழக்கம். இதனால், ப்ளே ஆஃப் போன்ற முக்கியமான போட்டிகளில் முழுக்க முழுக்க தோனியின் சில கேப்டன்சி நுணுக்கங்களாலும், அந்த நாளின் சிறப்பான ஆட்டத்தாலும் சிஎஸ்கே தப்பித்துவிடுகிறது. ஒரு ஆல்-ரவுண்டர் பர்ஃபாமென்ஸை சென்னை அணியிடம் எதிர்ப்பார்க்க வேண்டுமெனில், மற்ற வீரர்களையும் களத்தில் இறக்கிவிட்டு தோனி பரிசோதனை செய்திருக்க வேண்டும். இன்னும் ஒரு போட்டியே மீதமிருக்கும் நிலையில், இருக்கிற ப்ளேயிங் லெவனையே மாற்றி மாற்றி பரிசோதித்து கொண்டிருக்கிறார் தோனி.


2. ஓப்பனர்களை மட்டுமே நம்பி இருக்கிறதா?



ருதிராஜ், டுப்ளெசி இல்லையென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டம் சுமார்தான். நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாம் பாதியில் டுப்ளெசி களமிறங்க மாட்டார் என செய்தி வந்தது. முதல் பாதியில் செட்டாகி இருந்த ஓப்பனிங் இணையை மீண்டும் மாற்றி இருந்தால், சிஎஸ்கேவுக்கு பின்னடைவாக அமைந்திருக்கும். ஆனால், காயம் குணமாகி டுப்ளெசி மீண்டும் களத்தில் வந்தது, ருதுராஜூடன் ஓப்பனிங் களமிறங்குவது அணிக்கு அவ்வளவு பலம். ஒரு இன்னிங்ஸில் சிஎஸ்கேவின் ஸ்கோரில் பாதியை ஓப்பனிங் பேட்ஸ்மேன்களின் பங்களிப்பால் கிடைத்து வருகிறது. முக்கியமான ப்ளே ஆஃப் போன்ற போட்டிகளில், ஒரு வேளை ருதுவும், டுப்ளெசியும் சொதப்பினால் சிஎஸ்கேவால் சமாளித்து பெரிய ஸ்கோர்களை எட்டுவது கடினமாகும். 


3. ஃபீல்டிங்கிற்கு பெயர்ப்போன சிஎஸ்கே சொதப்பல்


நேற்றைய போட்டியில், டெல்லி அணியின் வெற்றிக்கு 30 பந்தில் 38 ரன்கள் தேவைப்பட்டது. ஹெட்மயரும், அக்ஷர் படேலும் சிங்கிள்களாக ரன்களை எடுத்தனர். ட்வேய்ன்  ப்ராவோ வீசிய ஆட்டத்தின் 18வது ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஓவரில் டேஞ்சர் பேட்ஸ்மேன் ஹெட்மயர் கைக்கே அளித்த கேட்ச்சை சென்னை வீரர் கிருஷ்ணப்ப கவுதம் தவறவிட்டார். மேலும், அந்த பந்து பவுண்டரியாகவும் மாறியது. அந்த ஓவரில் மட்டும் டெல்லி 12 ரன்களை எடுத்தது. போட்டியில் களமிறக்கப்படாத கிருஷ்ணப்பா கவுதம், சப்ஸ்ட்யூட்டாக களமிறங்கினார். அவர் சொதப்பியது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. 


சமீபத்தில் ஹைதரபாத்துக்கு எதிரான போட்டியில், 7 விக்கெட்டுகளை எடுத்தது சென்னை அணி. அந்த போட்டியில், 6 கேட்சுகள் எடுத்திருந்தது சென்னை அணி. சிறப்பான ஃபீல்டிங் செய்யும் டுப்ளெசி, ரெய்னா, ராயுடு, மொயின் அலி போன்ற வீரர்கள் அணிக்கு இருப்பது பலம்தான். ஆனால், அவ்வப்போது ஃபீல்டிங்கில் கொஞ்சம் சறுக்கினாலும், ஆட்டத்தின் போக்கு கையை மீறி செல்கிறது. இதனால், ஓப்பனர்களுக்கு சப்போர்ட்டான மிடில் ஆர்டர், பெளலர்களுக்கு சப்போர்ட்டான ஃபீல்டிங் என அணி தயாராவது அவசியம்.