ஐ.பி.எல். தொடரில் சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டியில், வெற்றியை தீர்மானிக்கக் கூடிய மற்றும் ரசிகர்கள் காண விரும்பும் வீரர்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.


16வது ஐபிஎல் சீசன்:


நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நான்கு முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,  நடப்பு சாம்பியனான பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணிகள் மோத உள்ளன. அகமதாபாத்தில் இன்று மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. தொடரின் முதல் போட்டியில் யார் வெல்வது என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ள நிலையில், வெற்றியை தீர்மானிக்கக் கூடிய மற்றும் ரசிகர்கள் காண விரும்பும் வீரர்களாக சிலர் திகழ்கின்றனர். 


1. மகேந்திர சிங் தோனி


போட்டியில் ரசிகர்கள் அதிகம் காண விரும்பும் வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் தோனியின் பெயர் இருப்பது யாருக்கும் எந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தாது. சென்னை அணி 4 முறை கோப்பையை வென்றபோதும், அந்த அணிக்கு கேப்டன் அவர் தான். தோனியின் கடைசி ஐ.பி.எல். தொடர் இதுவென கூறப்படும் நிலையில், அவர் விளையாடும் போட்டிகள் அனைத்தையும் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். அதோடு, பேட்டிங்கில் தனி ஒருநபராக வெற்றிகளை பெற்றுத்தரக்கூடிய வீரர் தான் தோனி.


2. ஹர்திக் பாண்ட்யா:


கேப்டனாக அறிமுகமான முதல் தொடரிலேயே கோப்பையை வென்ற பாண்ட்யா, நடப்பாண்டு எவ்வாறு செயல்பட உள்ளார்? என்பதை காண ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். அண்மை காலமாக சர்வதேச போட்டிகளில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பாண்ட்யா தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதே ஃபார்முடன் குஜராத் அணியின் வெற்றிக்கும் பாண்ட்யா முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


3. பென் ஸ்டோக்ஸ்


மினி ஏலத்தில் ரூ.16.25 கோடிக்கு வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், சென்னை அணி நிர்வாகத்தில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் எனும் பெருமையை பெற்றுள்ளார்.  நடப்பு தொடரின் முதல் பகுதியில் அவர் வெறும் பேட்ஸ்மேன் ஆக மட்டுமே விளையாட இருந்தாலும், சென்னை அணியின் வெற்றிக்கு சிறப்பான பங்களிக்க கூடிய அதிரடி பேட்ஸ்மேன் ஆவார்.


4.  ரவீந்திர ஜடேஜா:


காயம் கரணமாக ஓய்விலிருந்த ஜடேஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அண்மையில் மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு திரும்பினார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றுவதில், ஜடேஜாவின் பங்கு மிக முக்கியமானது.  பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு, சென்னை அணிக்கு வெற்றி தேடி தரக்கூடிய வல்லவர் என்பதால் ஜடேஜாவை காண ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனர்.


5. ரஷீத் கான்:


கடந்த ஆண்டு குஜராத் அணி கோப்பையை கைப்பற்ற முக்கிய பங்கு வகித்தவர், ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த ரஷீத்கான். அண்மையில் அவரது தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தானை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை கைப்பற்றியது. அதோடு, டி-20-யில் பவுண்டரிகள் எதுவும் வழங்காமல் தொடர்ந்து 100 பந்துகளை வீசியும், அண்மையில் சாதனை படைத்தார். இதனால், இவரது ஆட்டத்தை காணவும் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.