200 என்ற இலக்கையே கொஞ்சம் குறைவோ என்று கருதுகிறது, ஐபிஎல் 2023. இந்த சூழ்நிலையில் ஸ்ட்ரைக் ரேட்டின் முக்கியத்துவத்தைப் பற்றிய உரையாடல்களுக்கு மத்தியில், விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் ஆங்கர் பாத்திரத்தை வகிக்கும் முக்கியத்துவத்தை ஏன் அவ்வளவு நம்புகிறார் என்பதை விளக்கியுள்ளார்.


ஆங்கர் ரோலில் கோலி


விராட் கோலி பேசுகையில், குறிப்பாக பவர்பிளே குறித்தும் பேசினார். பொதுவாக ஒரு டி20 போட்டியின் முதல் 6 ஓவர்கள் பேட்டிங் செய்பவர்கள் ஏன் மெதுவாக விளையாடுகிறார்கள் என்பதை வெளியில் இருப்பவர்கள் புரிந்துகொள்வது கடினம் என்று கூறி இருக்கிறார். இந்த வாரத் தொடக்கத்தில் ஐபிஎல் 2023 இல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக 44 பந்துகளில் 61 ரன்கள் எடுத்த விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட்டை பல கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். மேலும் கோலி முதல் 25 பந்துகளில் 42 ரன்கள் மட்டுமே எடுத்து லக்னோ பந்துவீச்சாளர்களின் தாக்குதலை சமாளித்து அணியை வழிநடத்தி சென்றார்.



கோலி ஸ்ட்ரைக் ரேட்டின் மீது கேள்வி


அதிலும், கோலி பவர்பிளேக்குப் பிறகு இன்னும் மெதுவாகச் ஆடினார். எல்எஸ்ஜியின் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களான க்ருனால் பாண்டியா மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோருக்கு எதிராக அதிரடி காட்ட தயங்கினார். மேலும் 42 ரன்னிலிருந்து 50 க்கு செல்ல 10 பந்துகளை எடுத்துக்கொண்டார். இருப்பினும், ஃபாஃப் டு பிளெசிஸுடன் கைகோர்த்து அந்த ஜோடி 96 ரன்கள் குவித்தது. கோலி ஆட்டமிழந்து வெளியேறிய பிறகுதான், RCB கேப்டன் டு பிளெசிஸ் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோர் LSG தாக்குதலை கிழித்து 212 ரன்களை பதிவு செய்தனர். கேப்டன் டு பிளஸிஸ் 46 பந்தில் 79 ரன்களும், மேக்ஸ்வெல் 29 பந்தில் 59 ரன்களும் எடுத்தனர். விராட் கோலியை விமர்சித்தவர்களில் நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டவுல் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரைசதம் அடித்திருந்தாலும், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மெதுவாக விளையாடினார் என்று கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: ABP Nadu Metaverse: 3ஆம் ஆண்டில் நுழையும் ABP நாடுவின் புதிய முயற்சி...செய்தி நுகர்வில் புதிய அனுபவத்தைத் தரும் ABP NADU Metaverse..இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகம்..!


ஆங்கர் பாத்திரம் அவசியமா?


"ஆமாம் நிச்சயமாக நான் ஆங்கர் பாத்திரத்தில் ஆடுவதை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன், பலர் அந்த சூழ்நிலையில் இல்லாததால், அவர்கள் விளையாட்டை வித்தியாசமாக பார்க்கிறார்கள்," என்று கோலி ஜியோசினிமாவுக்கான பேட்டியில் ராபின் உத்தப்பாவிடம் கூறினார். மேலும் பேசிய அவர், "திடீரென்று பவர்பிளே முடிந்ததும் அதிரடி காட்ட பேட்டை சுழற்றுவார்கள். ஆனால் பவர்பிளேயில் விக்கெட் வீழாதபோது, அணியின் சிறந்த பவுலர் அந்த ஓவரை வீச வருவார். முதல் இரண்டு ஓவர்கள் அந்த பவுலரை பார்த்து பொறுமையாக ஆடினால், அவர் தந்திரங்களை புரிந்து, அடுத்த இரண்டு ஓவர்களில் நாம் ஆதிக்கம் செலுத்தலாம். அப்போதுதான் மொத்த இன்னிங்க்ஸும் எளிதாகும்", என்றார். இந்த டெக்னீக்கை அவர் காலம் காலமாக பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளது நாம் கண்கூடாக பார்த்ததுதான். குறிப்பாக கடந்த டி20 உலககோப்பையில், ஹாரிஸ் ரவூஃப் ஓவர். 19வது ஓவரின் கடைசி இரண்டு கடினமான பந்துகளை சிக்ஸர்கள் அடித்து வென்றதை எடுத்துக்கொள்ளலாம். 



கோஹ்லி ஏன் ஆர்சிபியை விரும்புகிறார்?


முதல் 3 ஆண்டுகளில் ஆர்சிபியிடமிருந்து பெற்ற ஆதரவுக்கு விசுவாசமாக இருப்பதாகவும் கோஹ்லி கூறினார். 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரை ஒரே அணிக்காக விளையாடிக்கொண்டிருக்கும் ஒரே கிரிக்கெட் வீரர் கோலி மட்டுமே. ஐபிஎல் 2021க்குப் பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலகிய போதிலும், கோஹ்லி ஆர்சிபிக்காக டு பிளெசிஸின் கீழ் விளையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறார். "இது ஆச்சரியமாக இருக்கிறது. RCB உடனான இந்த பயணத்தை நான் ஏன் மிகவும் மதிக்கிறேன் என்றால், முதல் மூன்று வருடங்கள், அவர்கள் என்னை நிறைய ஆதரித்தார்கள். அந்த நேரத்தில் பயிற்சியாளராக இருந்த ரே ஜென்னிங்ஸ் இடம் ஒன்றே ஒன்றுதான் கேட்டேன், டாப்-ஆர்டரில் பேட் செய்ய வேண்டும் என்று கேட்டேன். ஏனென்றால் நான் இந்தியாவுக்காக நம்பர். 3 இல் பேட் செய்தேன், இங்கும் நம்பர் 3 இல் பேட் செய்ய விரும்புகிறேன் என்றேன்," என அவர் மேலும் கூறினார். இன்று பெங்களூருவில் 4 போட்டிகளுக்குப் பிறகும் வெற்றியில்லாமல் இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் விளையாட உள்ள ஆர்சிபி போட்டியில் கோலி தனது ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.