நடப்பு ஐபிஎல் சீசனின் இரு வலுவான அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் துபாய் மைதானத்தில் இன்று இரவு மோதுகின்றன. இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார் டெல்லி கேப்டன் பண்ட். பண்ட்டுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, “ஹாப்பி பர்த்டே பண்ட், களத்தில் சந்திப்போம்” என பதிவிட்டுள்ளது. 


குறைந்த காலக்கட்டத்தில் டெஸ்ட், ஒரு நாள், டி-20 என மூன்று ஃபார்மெட்களிலும் தன்னை ஒரு பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் நிரூபித்து உள்ளார் ரிஷப் பண்ட். அதுமட்டுமின்றி, பிரமாண்டமான கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ஐபிஎல்லில் ஒரு அணியின் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த சீசனில், சிறப்பாக விளையாடி வரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. ஐபில் வரலாற்றில், தனது முதல் கோப்பையை வெல்லும் முனைப்பில் ப்ளே ஆஃப் சுற்றில் விளையாட இருக்கிறது. 






இந்நிலையில், கேப்டன் பண்ட்டுக்கு கிரிக்கெட் வட்டாரத்தில் இருந்து பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்து வருகின்றது.  அந்த வரிசையில், சிஎஸ்கே அணி சார்பில் பண்ட்டுக்கு சிறப்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள அந்த பதிவில், ”பிறந்தநாள் வாழ்த்துகள் பண்ட், களத்தில் சந்திப்போம்” என பதிவிடப்பட்டுள்ளது.  சிஎஸ்கேவின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. 






இரு அணிகளுக்கும் இன்னும் இரண்டு போட்டிகளே மீதமிருக்கும் நிலையில், டாப் இடத்தில் நிறைவு செய்து குவாலிஃபையரில் விளையாடி ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் களமிறங்கும். கடைசியாக சென்னை அணி விளையாடிய போட்டியில்,189 ரன்கள் அடித்தும் ராஜஸ்தான் ராயல்ஸ் அதிரடியாக சேஸ் செய்து போட்டியை வென்றது. டெல்லியைப் பொருத்தவரை, நடப்பு சாம்பியன்ஸ் மும்பையை வீழ்த்தி அசுர பலத்துடன் களத்தில் இருக்கிறது. இதனால், இன்று நடைபெற இருக்கும் போட்டி, கிட்டத்தட்ட ஒரு ப்ளே ஆஃப் அல்லது இறுதிப்போட்டியை போன்றதொரு ஃபீல் தரும் என்பதில் சந்தேகமில்லை.