14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் லீக் போட்டிகள் சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்ற நிலையில், இரண்டாவது லீக் போட்டிகள் அகமதாபாத் மற்றும் டெல்லியில் நடைபெற உள்ளன. இதுவரை 21 லீக் போட்டிகள் முடிந்துள்ளன.


நாட்டில் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் தகுந்த பாதுகாப்புடன் இந்தத் தொடரில் பங்கேற்று வருகின்றனர்.




முன்னதாக, தொடர் தொடங்குவதற்கு முன்பு சில வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அந்நேரத்தில், அது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அதைத்தொடர்ந்து, எந்தவித பிரச்னைகளும் இல்லாமல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.


ஆனால், சில வீரர்கள் காயம் காரணமாகவும், பயோ பபுள் விதிமுறைகளால் மன உளைச்சல் ஏற்பட்டு தொடரில் இருந்து விலகினர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஜாப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினர். கடந்த ஓராண்டாக பயோ பபுளில் உள்ளதால், குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும் என்று கூறி, லியாம் லிவிங்ஸ்டன் விலகினார்.


மேலும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ‘யார்க்கர் கிங்’ நடராஜன் தொடரில் இருந்து விலகினார்.


இந்நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். கொரோனா தொற்றுக்கு எதிராக தனது குடும்பத்தார் போராடி வரும் நிலையில் இந்த நேரத்தில் அவர்களுடன் இருப்பது அவசியம் என்று அவர் கூறினார்.


அஸ்வினை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினர்.




மேலும், ‛மருத்துவமனையில் மக்களை அனுமதிக்க முடியாத நிலையில் ஐபிஎல் தொடருக்கு எப்படி செலவு செய்கிறார்கள்? கொரோனா சூழலில் அணி உரிமையாளர்களின், நிறுவனங்கள், அரசு ஐபிஎல்-க்கு  இவ்வளவு செலவு செய்வது ஏன்? வீரர்கள் பாதுகாப்பாக இருக்கிறோம், ஆனால் இனியும் பாதுகாப்பாக இருப்போமா என்பதே கேள்வி. கொரோனா சூழலில் ஐபிஎல் போட்டிகளை தொடர்வது பாதுகாப்பானது தானா?’ என, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ டை கேள்வி எழுப்பினார்.


மேலும், நாட்டில் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், ஐபிஎல் போட்டிகள் நடப்பது எதற்கு என்று சிலர் கேள்வி எழுப்பியிருந்தாலும், சிலர் தற்போதைக்கு ஐபிஎல் தொடரே, கொரோனா அச்சத்தில் இருந்து போக்க ஒரே வழி என்றும் கூறுகின்றனர்.


இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கலந்து கொண்டுள்ள வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஐ.பி.எல் சிஓஓ ஹேமங் அமின் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘ஐபிஎல் தொடர் முடிந்து வீரர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்கள் என நிர்வாகம் உறுதி அளிக்கிறது. ஐபிஎல் தொடருக்கு பின் வீரர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை பிசிசிஐ கவனித்துக்கொள்ளும். வீரர்களின் பாதுகாப்பு கருதி கொரோனா விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். அதன்படி, இனி வீரர்களுக்கு 5 நாட்களுக்கு பதில் 2 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை எடுக்கப்படும். தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மையான நோக்கமாகும். ஒவ்வொரு முறையும் ஜெயிப்பதற்காக விளையாடும் நீங்கள் இந்த முறை மனித நேயத்திற்காக விளையாடுகிறீர்கள்’ என கூறப்பட்டுள்ளது.