பெரிதும் எதிர்பாக்கப்படும் ஐபிஎல் இரண்டாம் பாதி இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், போட்டிகளைக் காண ரசிகர்கள் அனுமதிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


கொரோனா பரவல் காரணமாக, 2021-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் பாதியில் ஒத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டாவது பாதியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி நடைபெற உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், 2021 ஐபிஎல் சீசனின் இரண்டாம் பாதியில் நடக்க இருக்கும் போட்டிகளை ரசிகர்கள் நேரில் காண இருக்கின்றனர். 






ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியும், மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியும் முதல் போட்டியில் மோத உள்ளதால், எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 16-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. https://www.iplt20.com/ என்ற இணையதளத்தில் அல்லது PlatinumList.net.  என்ற தளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். 






துபாய், ஷார்ஜா, அபு தாபி ஆகிய இடங்களில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் ஐபிஎல் இரண்டாம் பாதி போட்டிகள் நடைபெற உள்ளது. கொரோனா பரவல் அபாயம் உள்ளதால், தீவிர கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


செப்டம்பர் 19-ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடர், அக்டோபர் 15-ம் தேதி வரை நடக்க உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தொடங்கும் இரண்டாம் பாதியில் சிறப்பாக விளையாடும் அணிகள் புள்ளிப்பட்டியலில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், டாப் நான்கில் இடம் பிடிக்கப்போகும் அணிகள் யாவை என்பதில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. 


IPL 2021: ஐபிஎல் இரண்டாம் பாதியில் யார் உள்ளே? யார் வெளியே? - வீரர்கள் முழு விவரம்