இந்திய அணிக்கும், இங்கிலாந்திற்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், இந்திய வீரர்கள் மிகவும் மோசமாக ஆடி 78 ரன்களுக்கு சுருண்டது. இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து இந்தியாவை விட 354 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.


இந்த நிலையில், இந்தியாவின் தற்போதைய பேட்டிங் நிலைமையை பார்க்கும்போது இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கேப்டன் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் சதமடித்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. அவரது பேட்டிங் பார்ம் மற்ற வீரர்களை காட்டிலும் மிகவும் மோசமாக உள்ளது. தொடர்ந்து ஆண்டர்சனின் பந்துவீச்சிலே அவர் ஆட்டமிழந்து வருகிறார்.




இந்த நிலையில், இந்திய அணியின் இளம் வீரர் ஒருவர் விராட்கோலி கண்டிப்பாக இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் சதமடிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ரியான் பராக். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், இரண்டாவது இன்னிங்சில் விராட்கோலி 100 ரன்களை எடுப்பார் என்று பதிவிட்டுள்ளார். அவரது பதிவுக்கு கீழே கலவையான கருத்துக்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.






முன்னதாக, இந்த தொடர் தொடங்கியது முதல் விராட் கோலி தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். அவரது பேட்டிங் மற்றும் டாஸ் வெற்றி பெற்றும் பேட்டிங்கை தேர்வு செய்த அவரது முடிவிற்கும் பலரும் கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் உடனடியாக விராட் கோலி சச்சின் டெண்டுல்கருக்கு போன் செய்துதான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்க வேண்டும் என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.




கோலி மட்டுமின்றி இந்திய முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, புஜாரா, ரஹானே, ரிஷப் பண்ட், ஜடேஜா என அனைவரும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகின்றனர். நிலையான ஆட்டத்தை எந்த ஜோடியும் வெளிப்படுத்தவில்லை. இந்த நிலையில், ரியான் பராக் விராட் கோலி மீது மிகுந்த நம்பிக்கையில் அவர் இரண்டாவது இன்னிங்சில் சதமடிப்பார் என்று கூறியிருப்பது கோலி மீது அவர் வைத்துள்ள அசுர நம்பிக்கையை காட்டுவதாகவே உள்ளது.


மேலும் படிக்க : தங்கத்திலும் சேமிக்கலாம்.. லலிதா ஜூவல்லரியின் நகை முன்பதிவுத் திட்டம்!