இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 7ஆவது டி20  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் நடைபெற இருந்த டி-20 உலகக்கோப்பை தொடர் இப்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், டி-20 உலககோப்பைக்கு தேர்வான அணி விவரங்களை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.






2021 மார்ச் மாத முடிவில், சர்வதேச டி-20 தரவரிசை பட்டியலின் அடிப்படையில் டி-20 உலகக்கோப்பைக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், க்ரூப் 1 மற்றும் 2 என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.


குழு :1


இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், க்ரூப் ஏ வின்னர், க்ரூப் பி ரன்னர்.


குழு:2


இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், க்ரூப் ஏ ரன்னர், க்ரூப் பி வின்னர்.


இது தவிர, முதல் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த முதல் சுற்றில், இரு பிரிவுகளின் கீழ் 8 அணிகள் போட்டியிடுகின்றன. இதில் இருந்து ஒவ்வொரு பிரிவிலும், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தேர்ச்சி பெறும். 


க்ரூப்:  ஏ


இலங்கை, ஐயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா


க்ரூப்: பி


வங்கதேசம், ஸ்காட்லாந்து, பப்பா நியூ கினியா, ஓமன்.


அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் டி-20 உலகக்கோப்பை நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறும் என ஐசிசி தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில், சர்வதேச துபாய் மைதானம், அபு தாபியில் உள்ள ஷேக் சையத் மைதானம், ஷார்ஜா மைதானம், ஓமன் கிரிக்கெட் அகாடெமி மைதானம் ஆகிய நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.






எனவே, துபாய், ஷார்ஜா, அபு தாபி, மஸ்கட் ஆகிய இடங்களில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “டி-20 உலகக்கோப்பை தொடரை இந்தியாவில் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தோம். அதை உறுதிப்படுத்த முழுமையாக முயற்சித்தோம். ஆனால், கொரோன பரவல் காரணமாக அனைவரின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, டி-20 உலகக்கோப்பை தொடரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடத்த முடிவு செய்துள்ளோம். எனினும், ரசிகர்கள் மறக்க முடியாத வகையில் இத்தொடரை சிறப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம்” என பிசிசிஐ செயலாளர் ஜே ஷா தெரிவித்துள்ளார்.