செஸ் ஒலிம்பியாட் தொடருக்கு பிறகு பிரக்ஞானந்தா அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கப் செஸ் தொடரில் பங்கேற்றுள்ளார். இந்தத் தொடரில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன், அணிஷ் கிரி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தத் தொடரின் முதல் போட்டியில் பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 4ஆம் இடத்திலுள்ள அலிரெசா ஃபிரொஸ்ஜாவை வீழ்த்தினார். இரண்டாவது சுற்றில் தரவரிசையில் 9வது இடத்திலுள்ள அனிஷ் கிரியை வீழ்த்தினார். மூன்றாவது சுற்றில் நெய்மனை வீழ்த்தினார். 


இந்நிலையில் நேற்று நடைபெற்ற நான்காவது சுற்று போட்டியில் பிரக்ஞானந்தா அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான லெவான் அரோனியனை எதிர்த்து விளையாடினார். உலக செஸ் தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள அரோனியனை எதிர்த்து பிரக்ஞானந்தா விளையாடிய முதல் போட்டியை டிரா செய்தார். அடுத்து இரண்டாவது போட்டியிலும் இரு வீரர்களும் சிறப்பாக விளையாடினர். இதன்காரணமாக அந்தப் போட்டியும் டிராவில் முடிந்தது.


 






மூன்றாவது போட்டியில் பிரக்ஞானந்தா சிறப்பாக விளையாடினார். இதன்காரணமாக அந்தப் போட்டியை வென்றார். அடுத்ததாக நான்காவது போட்டியிலும் பிரக்ஞானந்தா அசத்தலாக விளையாடி லெவான் அரோனியனை வென்றார். இதன்மூலம் 3-1 என்ற கணக்கில் லெவான் அரோனியனை பிரக்ஞானந்தா வீழ்த்தி அசத்தினார். இந்தத் தொடரில் ஒரு வீரருடன் 4 போட்டிகள் நடைபெறும் அதில் அதிக புள்ளிகள் எடுக்கும் வீரர்கள் வெற்றி பெறுவார்கள். 


இதுவரை நடைபெற்றுள்ள 4 சுற்றுப் போட்டிகளிலும் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று அசத்தியுள்ளார். இதன்காரணமாக 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் மேக்னஸ் கார்ல்சன் உடன் இணைந்து உள்ளார். அனைவரும் எதிர்பார்க்கும் பிரக்ஞானந்தா மற்றும் உலக சாம்பியன் கார்ல்சன் இடையேயான போட்டி கடைசி சுற்றில் நடைபெற உள்ளது. 


 






முன்னதாக செஸ் ஒலிம்பியாட் தொடர் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 8ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஆடவர் அணி மற்றும் மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அத்துடன் தனி நபர் பிரிவில் இந்திய வீரர்கள் பதக்கங்களை வென்று இருந்தனர். குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.குகேஷ் தங்கப்பதக்கமும், பிரக்ஞானந்தா வெண்கல பதக்கமும் மற்றும் வைஷாலி வெண்கலப் பதக்கமும் வென்று இருந்தனர். 




மேலும் படிக்க: உலக பாரா துப்பாக்கி சுடுதலில் ஒரே நாளில் மூன்று பதக்கம்! அசத்தும் இந்தியா!!