"தமிழ்நாடு சர்வதேச அலைச்சறுக்கு ஓப்பன் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் சிவராஜ் பாபு மூன்றாவது சுற்றுக்கும், மகளிர் பிரிவில் கமலி மற்றும் சுகர் சாந்தி இரண்டாவது சுற்றுக்கும் முன்னேறியுள்ளனர் "

 

சர்வதேச அலைச்சறுக்கு போட்டி ( International surfing chennai ) 

 

அலைச் சறுக்கு (Surfing) என்பது நீர் விளையாட்டு ஆகும். பலகையின் மீது நின்று, சீறும் அலைகளில் முன்னேறி நகர்ந்து செல்லும் சாகச விளையாட்டு. தமிழ்நாட்டில் சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ள கோவளம் மற்றும் மகாபலிபுரம் ஆகிய கடற்கரை, அலைச்சறுக்கு போட்டி விளையாடுவதற்கு ஏதுவான சூழல் அமைந்துள்ளது. மகாபலிபுரம் பகுதியில் இந்திய அளவிலான அலைச்சறுக்கு போட்டிகள் பலமுறை நடைபெற்றுள்ளது.

 

இந்தநிலையில், இந்தியாவில் முதல் முறையாக சர்வதேச அலைச்சறுக்கு போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா தரப்பில் 16 வீரர்கள் உட்பட தாய்லாந்து, சிங்கப்பூர் மலேசியா, வங்கதேசம், மியன்மார், உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சர்வதேச அலைச்சறுக்கு  வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் உலக அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவர். இப்போட்டியில் பரிசுகளை வெல்ல இருபாலரும் முந்திக்கொண்டு தங்கள் சாகசங்களை நிகழ்த்தி வருகின்றனர்



மூன்றாவது சுற்றுக்கு தமிழக வீரர் முன்னேற்றம்

 

இந்த தமிழ்நாடு சர்வதேச அலைச் சறுக்கு ஓபன் போட்டியின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் பிலிப்பைன்ஸ் வீரர் ராபர்ட் மகலூனா, தொடரின் அதிகபட்ச ஒற்றை அலை மதிப்பெண்ணை பதிவு செய்து அசத்தியுள்ளார். தனது 5-வது முயற்சியின்போது எழுந்த அலையில், அசத்தலாக அலைச்சறுக்கு செய்த அவர், ஒரே அலையில் 7.25 புள்ளிகள் பெற்று அசத்தியது மட்டுமின்றி, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

 

மகளிர் பிரிவு

 

அதே போல ஜப்பானின் ரியோ இனபா ஒரே அலையில் 6.50 புள்ளிகளும், இந்தோனேசியா வீரர் டானி விடியாண்டோ 6.40 புள்ளிகளும் அசத்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீரர்கள் 16 பேரில், தமிழ்நாடு வீரர் சிவராஜ் பாபு ஒருவர் மட்டுமே மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மேலும் மகளிர் பிரிவில் இந்தியாவின் சுகர் சாந்தி பானர்சே மற்றும் கமலி ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.



இப்போட்டியில் பரிசுகளை வெல்ல இருபாலரும் போட்டி போட்டுக் கொண்டு அலையில் தங்கள் சாகசங்களை நிகழ்த்தி வருகின்றனர்.  இப்போட்டி வருகின்ற 20 ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற்று, பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இறுதி நாள் அன்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாபலிபுரம் பகுதியில் தொடர்ந்து பல்வேறு சர்வதேச போட்டிகள் மற்றும் சர்வதேச அளவிலான நிகழ்வுகள் நடைபெற்று வருவது சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.