துருக்கி கால்பந்து சூப்பர் லீக் போட்டி ஒன்றில் நடுவரை கால்பந்து அணியை சேர்ந்த உரிமையாளர் ஒருவர் முகத்தில் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, துருக்கி சூப்பர் லீக் போட்டிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 


என்ன நடந்தது..? 


கடந்த திங்கட்கிழமை துருக்கி சூப்பர் லீக்கின் கைகூர் ரிஸ்போர் மற்றும் அங்காராகுகு அணிகள் நேருக்கு நேர் மோதின. இரு அணிகள் மோதும் போட்டி துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்றது. கைகூர் ரிஸ்போர் மற்றும் அங்கிரகுகு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. அப்போது ஆத்திரமடைந்த கைகூர் ரிஸ்போர் அணியின் உரிமையாளர் திடீரென களத்திற்கு வந்து நடுவரை கடுமையாக தாக்கினார். 


இந்த ஆட்டத்தின் 97வது நிமிடத்தில் கைகூர் ரிஸ்போர் வீரர் ஒருவர் கோல் அடித்தார். இதையடுத்து ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது. அப்போது இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டம் டிரா ஆனதும் கைகூர் ரிஸ்போரின் ரசிகர்கள் ஆவேசத்துடன் மைதானத்திற்குள் நுழைந்தனர். அப்போது இவர்களுடன் கைகூர் ரிஸ்போர் உரிமையாளரும் மைதானத்திற்குள் வந்து யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், திடீரென நடுவரின் முகத்தில் ஒரு குத்து விட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத நடுவர் நிலைகுலைந்து மைதானத்திற்குள் சுருண்டு விழுந்தார். இதனால் அங்கு ஒரு சில நிமிடங்கள் பரபரப்பான சூழல் நிலவியது. தொடர்ந்து, பின்னாடியே ஓடி வந்த ரசிகர் ஒருவர் வலியால் துடித்த நடுவரை ஓங்கி எட்டி மிதித்தார். 


வைரலான வீடியோ: 






அதன் பிறகு நடுவர் அவசரமாக டிரஸ்ஸிங் ரூமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அணியின் உரிமையாளர் நடுவரை தாக்கிய வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. தொடர்ந்து, கைகூர் ரிஸ்போர் நிறுவனத்தின் உரிமையாளர் காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டு, 2 நாட்கள் விசாரணை காவலில் வைத்துள்ளனர். மேலும், நடுவரை எட்டி உதைத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 


இந்த சம்பவத்திற்கு பிறகு தற்போது துருக்கி சூப்பர் லீக் கால்பந்து போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து துருக்கி அதிபர் ரெசெப் எர்டோகன் கூறியதாவது: இன்று மாலை நடந்த எம்கேஇ அங்கராகுகு-செய்குர் ரைஸ்போர் போட்டிக்கு பிறகு நடுவர் ஹலீல் உமுத் மெலர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிக்கிறேன், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். விளையாட்டு என்றால் அமைதி மற்றும் சகோதரத்துவம்தான் இருக்க வேண்டும். வன்முறைக்கு இருக்க கூடாது. துருக்கிய விளையாட்டுகளில் வன்முறை நடைபெறுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்." என தெரிவித்தார்.


யார் இந்த நடுவர்..? 


37 வயதான மெலர் என்ற நடுவர் 2017 முதல் FIFA நடுவராக செயல்பட்டு வருகிறார். இவரது முதல் போட்டி சாம்பியன் குழு போட்டியில் செல்டி - லாசியோ அணிகளுக்கு இடையே நடைபெற்றது.  துருக்கியில் உள்ள நடுவர்கள் பெரும்பாலும் கிளப் மேலாளர்கள் மற்றும் தலைவர்களால் அவர்களின் முடிவுகளுக்காக விமர்சிக்கப்படுகிறார்கள். இன்று ஒருபடி மேலே சென்று வன்முறையாகவே மாறியது. இந்தநிலையில், துருக்கி சூப்பர் லீக் போட்டிகள் எப்போது மீண்டும் தொடங்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.