முதல் கால்இறுதியில் முன்னாள் சாம்பியன் பிரேசில் தோல்வி அடைந்ததால்,  மற்றுமொரு முன்னாள் சாம்பியனான அர்ஜென்டீனா, நெதர்லாந்து இடையேயான 2-வது கால் இறுதி ஆட்டம், என்ன நடக்குமோ என்ற ஆர்வத்தையும் அதிக எதிர்பார்ப்பையும் சர்வதேசங்களின் கால்பந்து ரசிகர்களிடம் தூண்டியிருந்தது.


அதற்கேற்ப, கத்தாரின் லுசெய்ல் ஸ்டேடியத்தில் கூடியிருந்த 89 ஆயிரம் ரசிகர்களும் பெரும் ஆரவாரத்துடன் போட்டியை கண்டு களித்தனர். ஆட்டத்தின் முதல் நொடியில் இருந்தே பரபரப்பு தொற்றிக் கொண்டது. போட்டி அரங்கில் இருந்த 89 ஆயிரம் ரசிகர்களில், கிட்டத்தட்ட 90 சதவீதம் அர்ஜென்டீனா ரசிகர்கள்தான். எங்கு நோக்கினும், வெள்ளை, நீல வண்ணம்தான் காணப்பட்டது. 


ஆட்டம் தொடங்கியவுடனேயே, வலதுபுறத்தில் மெஸ்ஸியும் இடதுபுறத்திலும் ஆல்வரஸ்ஸும் சிறப்பாக பந்துகளை "பாஸ்" செய்தது, கால்பந்து விளையாட்டின் சிறப்பை வெளிப்படுத்தும் வண்ணம் இருந்தது. தடுப்பு ஆட்டத்திற்கு புகழ்பெற்ற நெதர்லாந்து அணியும் சிறப்பாக பந்துகளைத் தடுத்த வண்ணம் இருந்தனர். 


ஆட்டத்தின் 35 நிமிடத்தில், 4 வீரர்கள் மெஸ்ஸியை சூழ்ந்து தடுக்க முயற்சித்த போது, யாரும் எதிர்பாராத கோணத்தில், மெஸ்ஸி பந்தை "பாஸ்" செய்ய, அங்கு வந்த மொலினா, அர்ஜென்டீனாவின் முதல் கோலை அடித்தார்.  உடனே, அரங்கம் மட்டுமல்ல, உலகெங்கும் இப்போட்டியை கண்ட கால்பந்து ரசிகர்களும் கைதட்டி ரசித்திருப்பார்கள் என்றால் மிகையில்லை. அந்தளவுக்கு மிகச் சிறந்த கோலாக அமைந்தது. 


இந்தக் கோலினால், முதல் பாதி ஆட்டம் முழுவதும் அர்ஜென்டீனாவின் ஆதிக்கமே அதிகம் காணப்பட்டது. ஆனால், இரண்டாவது பாதியில் நெதர்லாந்து அணியும் தடுப்பு ஆட்டத்திற்குப் பதிலாக, அதிரடியாக கோலடிக்க முயற்சித்தது. ஆனால், அர்ஜென்டீனா தடுப்பு ஆட்டமும் கோல் கீப்பர் பெர்ணான்டஸின் மிகச்சிறந்த தடுப்புகளும் நெதர்லாந்துக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்தன. 


73 -வது நிமிடத்தில், அர்ஜென்டீனாவிற்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி, நட்சத்திர வீரர் மெஸ்ஸி கோலடித்து, முன்னணியை அதிகப்படுத்தினார். ஆனால், நெதர்லாந்து வீரர்கள் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதற்கு வெற்றிக் கிடைக்கும் வகையில், 83-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் வெக்ஹோர்ஸ்ட் கோலடித்தார்.


இதனால், ஆட்டத்தின் கடைசி நிமிடங்கள் பெரும் பரபரப்பாக மாறிவிட்டது. ஒவ்வொரு நிமிடமும் கோல் கம்பம் அருகே பந்து செல்லும் போதெல்லாம், கோல் விழுமா என்ற எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகப்படுத்தியது என்றால் தவறில்லை.  2-வது கோலடித்து சமன் செய்ய முயற்சித்த நெதர்லாந்து அணி கடுமையாகப் போராடியது. இந்தச் சூழலில், 90 நிமிடங்கள் முடிந்தது. ஆனால், "ஸ்டாப்பேஜ் டைம்" என கூடுதலாக 10 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. இந்த கூடுதல் நேரமும் முடிவடைய ஒரு நிமிடம் இருந்தபோது, யாரும் எதிர்பாராத வகையில், நெதர்லாந்து வீரர் வெக்ஹோர்ஸ்ட் மீண்டும் கோலடித்து, போட்டியை சமன் செய்தார். 


இதையடுத்து, கூடுதல் நேரமாக அரை மணி நேரம் வழங்கப்பட்டது.  இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.  இதையடுத்து, 120 நிமிட ஆட்டத்திற்குப் பிறகும் 2-2 என கோல்கணக்கு சமனில் இருந்ததால், ஆட்டத்தின் முடிவைத் தீர்மானிக்க,  இரு அணிகளுக்கும் கோலடிக்க தலா 5 வாய்ப்புகள் தரும் முதல் பெனால்டி ஷூட் வழங்கப்பட்டது.  அர்ஜென்டீனா கோல்கீப்பர் மார்டினஸ், அடுத்தடுத்து கோல்களைத் தடுத்து, அர்ஜென்டீனாவின் வெற்றியை உறுதி செய்தார்.  பெனால்டி ஷூட் முறையில் அர்ஜென்டீனா 4 கோல்களும், நெதர்லாந்து 3 கோல்களும் அடித்தனர். இதனால், பெனால்டி ஷூட்டில் 4-3 என்ற கோல் கணக்கில், கால் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தைத் தோற்கடித்து, அர்ஜென்டீனா அணி, அரைஇறுதிக்குள் நுழைந்தது. அரைஇறுதி ஆட்டத்தில் குரோஷியாவை எதிர்த்து, வரும் 14- ம் தேதி விளையாடுகிறது.


2014-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் அரை இறுதி ஆட்டத்திலும், இதேபோன்று, பெனால்டி ஷூட் முறையில் நெதர்லாந்தைத் தோற்கடித்தது அர்ஜென்டீனா என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த ஆட்டத்தைப் பொறுத்தமட்டில்,  இரு அணிகளும் கடுமையாகப் போராடின. 52 சதவீதம் நெதர்லாந்து வசமும், 48 சதவீதம் அர்ஜென்டீனா வசமும் பந்துகள் இருந்தன.  அதேபோல், "பாஸ்"களும் 632 முறை செய்தது நெதர்லாந்துதான்... பந்தை அதிக நேரம் வைத்திருந்தாலும், கோலடிக்கும் முயற்சிகளில் 7 முறை முயற்சித்து 4 முறை கோலுக்கு மிக அருகில் சென்றது அர்ஜென்டீனாதான். இதில் 2 முறை கோலும் அடித்தது அர்ஜென்டீனா. நெதர்லாந்தைப் பொறுத்தவரை, 2 முறை கோல்கம்பம் அருகே சென்று, 2 முறையும் கோலடித்தது.  


கடைசி நிமிடங்களில் ஏற்பட்ட பரபரப்பு காரணமாக, 88-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர்களும் அர்ஜென்டீனா வீரர்களும் கைகலப்பில் ஈடுபடுவது போன்ற சூழல் ஏற்பட்டது. பிறகு, நடுவரும் அதிகாரிகளும் சமாதானம் செய்த பிறகே, ஆட்டம் மீண்டும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.  இன்றைய ஆட்டம் தொடங்கியது முதல் கடைசி நொடி வரை, பரபரப்புக்குப் பஞ்சமில்லாத சிறந்த கால்பந்து ஆட்டமாக அமைந்தது என்றால் மிகையில்லை.