டெல்லியில் இன்று ஐ.பி.எல். தொடரின் 23-வது ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன. மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி, பெங்களூர் அணியை வீழ்த்தியது மூலமே அவர்களின் பலம் என்னவென்று அனைத்து அணியினரும் அறிந்திருப்பார்கள். வார்னர் தலைமையில் ஒரு முறையை கோப்பையை கைப்பற்றியுள்ள ஹைதராபாத் அணி, இந்த தொடர் தொடங்கியது முதல் மோசமான செயல்பாடுகளை மட்டுமே வெளிப்படுத்தி வருகிறது. 5 போட்டிகளில் ஆடியுள்ள ஹைதராபாத் அணி பஞ்சாப் அணியை தவிர, மீதம் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.




இந்த போட்டியில் டாசில் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட் செய்வதாக கூறினார். இதையடுத்து, ஹைதராபாத்தின் ஆட்டத்தை டேவிட் வார்னரும், ஜானி பார்ஸ்டோவும் தொடங்கியுள்ளனர். கடந்த ஆட்டத்தில் களமிறங்கிய வெற்றி அணியே இந்த ஆட்டத்திலும் சென்னைக்காக களமிறங்கியுள்ளது. கடந்த தொடரில் சென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்று ரசிகர்களால் சமூக வலைதளங்களில் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்ட கேதர் ஜாதவ், இந்த போட்டியில் சென்னை அணிக்கு எதிராக களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


சென்னை அணியில் கெய்க்வாட், டுப்ளிசிஸ், மொயின் அலி, ரெய்னா, ராயுடு, தோனி என்று பேட்டிங்கில் ஒரு படையே உள்ளது. இறுதியில் அதிரடி விருந்து படைக்க ஜடேஜா உள்ளார். பந்துவீச்சில் சாம்கர்ரன், தாக்கூர், தீபக் சாஹர், இங்கிடி உள்ளனர். ஹைதராபாத் அணயிில் வார்னர், பாஸ்டோ, வில்லியம்சன் ஆகியோர் மட்டுமே பார்மில் உள்ளனர். பந்துவீச்சில் ரஷீத்கான் மட்டுமே நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளார்.