ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது. இரண்டாவது பாதியின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிய எதிர்த்து விளையாட உள்ளது. ஐபிஎல் தொடரில் ஒரு இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் போல் இருக்கும் என்றால் அது சென்னை-மும்பை போட்டி தான். அந்த அளவிற்கு இந்தப் போட்டியில் விறுவிறுப்பு இருக்கும். ஏற்கெனவே முதல் பாதியில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை அணியை தோற்கடித்து உள்ளது. ஆகவே அந்தத் தோல்விக்கு இம்முறை சென்னை அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சென்னை அணியின் வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 


இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் இம்ரான் தாஹிர் வழக்கம் போல் தன்னுடைய தமிழ் ட்விட்டர் பதிவுகளை இன்று முதல் தொடங்கியுள்ளார். இன்று அவர் இட்டுள்ள பதிவில்,"என் இனிய தமிழ் மக்களே, உங்களுடைய நலம் நலமறிய ஆவல். சென்னை அணி வந்தோம், வென்றோம்,சென்றோம். உங்களுக்காக வருவோம்,வெல்வோம்,செல்வோம்.. எடு வண்டிய போடு விசில" எனப் பதிவிட்டுள்ளார்.  2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் சென்னை அணிக்கு மோசமாக அமைந்த போது அதில் இம்ரான் தாஹிர் வெறும் 3 விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருந்தார். 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் அவர் ஒரு போட்டியில் மட்டும் விளையாடி 2 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 


 






ஒவ்வொரு முறையும் விக்கெட் வீழ்த்திய பிறகு தன்னுடைய ஓட்டத்தின் மூலம் பராசக்தி எக்ஸ்பிரஸ் என்று பெயர் பெற்றுள்ளார். இரண்டாவது பாதியில் சென்னை அணியின் வெற்றிக்கு இவர் முக்கியமானவராக இருப்பார் என்று கருதப்படுகிறது. இம்ரான் தாஹிர் 2019ஆம் ஆண்டு 26 விக்கெட் வீழ்த்தி அந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பட்டத்தை வென்று இருந்தார். அதை போல் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் அவர் செயல்பட்டால் சென்னை அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 


ஐபிஎல் தொடரின் முதல் பாதி சென்னை அணிக்கு நன்றாகவே அமைந்தது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை அணி 5 வெற்றி மற்றும் 2 தோல்விகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இதேபோல் இரண்டாவது பாதியில் சிறப்பாக செயல்பட்டு இம்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்கள் எண்ணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: கேப்டன் பதவியில் இருந்து விலகினார் வீராட் கோலி!