வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி ஆடி வரும் 2வது டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட் செய்து வரும் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்து ஆடி வருகிறது. விராட்கோலி  87 ரன்களுடனும், ஜடேஜா 36 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.


தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் – ரோகித்சர்மா ஜோடி அபாரமாக ஆடினர். ஜெய்ஸ்வால் 57 ரன்களுடனும், ரோகித்சர்மா 80 ரன்களுடனும் அவுட்டானர். கடந்த டெஸ்டில் சதமடித்து அசத்திய ஜெய்ஸ்வால் இந்த போட்டியிலும் அபாரமாக ஆடினார். அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால் தன்னுடைய 500வது சர்வதேச போட்டியில் ஆடி வரும் விராட்கோலியை பற்றி பேசியுள்ளார்.


ஆசிர்வதிக்கப்பட்டவன்:


இதுதொடர்பாக, ஜெய்ஸ்வால் கூறியிருப்பதாவது, “ கிரிக்கெட் பற்றியும், கிரிக்கெட்டை தாண்டியும் அவரிடம் இருந்து ஏராளமான விஷயங்களை கற்றுக்கொண்டேன். அவர் பேட்டிங் செய்வதை பார்ப்பது அற்புதமாக இருந்தது. என்ன சொல்வது? அவர் ஒரு மேதை. அவருடன் விளையாடுவதால் நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவன்.


அவரவர் அனுபவத்தை விளக்குவதற்கும் ஒவ்வொரு வழி உண்டு. அவையனைத்தும் அனுபவங்கள். அனைவரது அறிவுரையையும் நான் மிக கவனமாக கேட்கிறேன். அவர்கள் பேசுவதற்கு பின்னால் சில சிந்தனைகள் இருக்கும். ரோகித்சர்மாவுடன் பேட்டிங் செய்வது மிகவும் அருமையாக இருந்தது. நாங்கள் எப்போதும் ஆட்டத்தின் சூழ்நிலை பற்றிதான் பேசுவோம். நாங்கள் எப்படி ஆட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வது? எங்கள் திட்டம் என்ன? என்பது குறித்து பேசுவோம். அவருடன் பேட்டிங் செய்வதும் மிகவும் அருமையான விஷயம் ஆகும்.”


இவ்வாறு அவர் கூறினார்.


ஜெய்ஸ்வால் அபாரம்:


இந்திய அணியின் புதிய நட்சத்திரமாக கருதப்படும் ஜெய்ஸ்வால் கடந்த டெஸ்ட் போட்டியில் ரோகித்சர்மா மற்றும் விராட்கோலி இருவருடனும் இணைந்து பேட்டிங் செய்தார். கடந்த டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் – ரோகித்சர்மா ஜோடி முதல் விக்கெட்டிற்கு 240 ரன்கள் குவித்தது. விராட்கோலி – ஜெய்ஸ்வால் ஜோடி 110 ரன்களை எடுத்தது.


தன்னுடைய 500வது டெஸ்ட் போட்டியில் ஆடி வரும் விராட்கோலிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பானிபூரி விற்பவரின் மகனான ஜெய்ஸ்வால் தன்னுடைய அபாரமான பேட்டிங்கால் ஐ.பி.எல். தொடரில் இடம்பிடித்து தன்னுடைய பேட்டிங் திறமையை அனைவருக்கும் நிரூபித்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தவிர்க்க முடியாத வீரராக உள்ள ஜெய்ஸ்வால், தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.


அறிமுக வீரராக களமிறங்கிய முதல் டெஸ்டிலே 171 ரன்கள் குவித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: IND Vs WI Test: கோலி அபாரம்..ரோகித், ஜெய்ஷ்வால் அசத்தல்..மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்டில் 288 ரன்கள் குவிப்பு


மேலும் படிக்க: Rohit Sharma: சதத்தை நழுவவிட்ட ரோகித் சர்மா; ஆவேசத்தில் ரோகித் சர்மா செய்தது என்ன தெரியுமா? வைரலாகும் வீடியோ