விருத்திமான் சாஹா தன்னை மிரட்டிய பத்திரிக்கையாளர் குறித்து முதன் முறையாக வெளியில் வாய் திறந்திருக்கிறார். இந்திய விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹாவுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த கிரிக்கெட் சகோதரத்துவமும் ஒன்றுபட்டிருந்தது. தற்போது இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய விக்கெட் கீப்பருக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய அணி வீரருக்கு பத்திரிக்கையாளர் மூலம் மிரட்டல் செய்தி அனுப்பியதை அறிந்து ரவி சாஸ்திரி அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் தலையிட வேண்டும் என்று ரவி கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, முன்னாள் வீரர்கள் வீரேந்திர சேவாக் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் இந்த விவகாரம் குறித்து உடனடியாக பிசிசிஐ விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.






இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பரான விருத்திமான் சஹா, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தனது வருத்தத்தை தெரிவித்தார். அணியில் தேர்வு செய்யப்படாததற்கு ராகுல் திராவிட்டை குற்றம்சாட்டினார். பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்னை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுமாறு அறிவுறுத்தினார் என்று சாஹா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கு எந்த சலனமுமின்றி யதார்த்தமாக எதிர்கொண்ட டிராவிட், "விருத்திமான் சாஹாவின் கருத்துகளால் நான் காயமடையவில்லை. அவர் நேர்மைக்கும் தெளிவுக்கும் தகுதியானவர். அவரது சாதனைகள் மற்றும் இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மீது எனக்கு ஆழ்ந்த மரியாதை உண்டு. இதனால் சாஹா மீதான என்னுடைய மதிப்பும் மரியாதையும் எப்போதும் குறையாது. ஆனால் புது வீரர்கள் திறமையாக வரும்போது, அவர்களை தேர்வு செய்வது எங்கள் கடமை, அதற்காக மிகுந்த மரியாதையுடன் குறிப்பிட்ட வீரரிடம் சென்று நேரடியாக பேசுவது சிறந்தது." என்று கூறியிருந்தார்.






இந்த நிலையில், சாஹாவின் சர்ச்சை கருத்து குறித்து பிசிசிஐ பொருளாளர் அருன் துமல் கூறுகையில், விருத்திமான் சாகாவின் டுவீட் குறித்தும், நடந்த உண்மை சம்பவம் என்னவென்றும் அவரிடம் கேட்போம். அவர் மிரட்டப்பட்டாரா என்பதும், அவரது டுவீட்டின் பின்னணி மற்றும் சூழல் என்ன என்பதும் எங்களுக்குத் தெரிய வேண்டும். இதுகுறித்து செயலாளர் (ஜெய். ஷா) நிச்சயமாக விருத்திமானிடம் பேசுவார்" என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் கூறியுள்ளார். இப்படியெல்லாம் பிரச்சனை நடந்துகொண்டிருக்க சாஹா ஒரு வாட்ஸ்ஆப் சாட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வாட்ஸ் அப் மூலம் பத்திரிகையாளர் ஒருவர் தனக்கு மிரட்டல் விடுப்பதாக ஒரு ஸ்கிரீன் ஷாட்டை பதிவிட்டிருந்தார். அதில், 'இனி நீ விக்கெட் கீப்பர் கிடையாது; எனது அழைப்பை ஏற்கவில்லை என்றால் இனி உன்னை எப்போதுமே நேர்க்காணல் செய்ய மாட்டேன்; நான் உனக்கு போதுமான நேரம் கொடுத்துவிட்டேன், நீ எனக்கு கால் செய்யவில்லை, இந்த அவமானத்தை மறக்கவே மாட்டேன்; பார்த்துக்கொள்கிறேன்", என மிரட்டியுள்ளார்.






இந்த பதிவை பார்த்துவிட்டு, சேவாக் தொடங்கி, ஹர்பஜன், ரவி சாஸ்த்ரி, ப்ராகியான் ஓஜா வரை பல வீரர்கள் அந்த பத்திரிக்கையாளர் யார் என்று வெளிப்படுத்த சொல்லி கேட்டிருந்தனர். அதோடு சாஹாவுக்கு நிறைய இடங்களில் இருந்து ஆதரவுகளும் வந்தன. பிசிசிஐ இதுகுறித்து அவரிடம் பேசும் என்ற நம்பிக்கை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அது குறித்து சாஹா பேசியுள்ளார். அதில், பிசிசிஐயில் இருந்து இதுவரை யாரும் என்னை தொடர்புக்கொள்ளவில்லை. ஒருவேளை அவர்கள் கேட்டாலும், நான் அந்த பத்திரிகையாளரின் பெயரை கூறப்போவதில்லை. ஏனென்றால் ஒருவரின் தொழிலை கெடுப்பது எனது நோக்கம் அல்ல. அதனை தெரிவிப்பதாக இருந்திருந்தால், அந்த ட்வீட்டிலேயே வெளிப்படுத்தியிருப்பேனே! ஊடக துறையில் இருக்கும் சிலர் இதுபோன்று அநியாயங்களை செய்கின்றனர். வீரர்களை மரியாதை இன்றி நடத்துகின்றனர் என்பதை உலகிற்கு காட்டவே இப்படி செய்தேன். இதுதான் எனக்கு பெற்றோர்கள் கற்றுக்கொடுத்த பாடம். ஆனால் அந்த பத்திரிகையாளர் மிகவும் பிரபலமானவர். இனி இதுபோன்று எந்தவொரு வீரருக்கும் நடக்காது என்ற நம்பிக்கை எனக்குள் வந்துள்ளது", என தெரிவித்துள்ளார்.