மகளிர் பிரீமியர் லீக் போட்டி மார்ச் மாதம் 4ஆம் தேதி தொடங்கியது. இது ஐபிஎல் போட்டித் தொடர் போல் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தாலும், இந்த ஆண்டு தான் முதல் முறை தொடங்கப்பட்டுள்ளதால், ஐந்து அணிகள் தான் களமிறங்கியுள்ளன. 

 

லீக் போட்டி தொடங்குவதற்கு முன்னர் டெல்லி கேப்பிடல்ஸ் அணிதான் மிகவும் பலமான அணியாக கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால் இதுவரை நடைபெற்றுள்ள போட்டி முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது மும்பை அணிதான் மிகவும் பலமான் அணியாக உள்ளது. அந்த அணி தான் களமிறங்கிய ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதுடன் யாராலும் வீழ்த்த முடியாத அணியாக உள்ளது. 

 

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு அந்த அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும், மும்பை அணியின் ஒவ்வொரு வீராங்கனையும் அணியின் வெற்றிக்காக களத்தில் மிகச்சிறப்பாக அவர்களது பங்களிப்பை அளித்து வருவதை போட்டியின் போது பார்க்க முடிகிறது. மேலும், அணியில் தனி ஒருவரின் விளையாட்டு மிகச் சிறப்பாக இருக்கும் போது, மீதம் உள்ள 10 பேரும் அவரை பாராட்டுவதும் கொண்டாடுவதையும் பார்க்க முடிகிறது. இது, மற்ற அணிகளில் இருந்தாலும் மும்பை அணியில் இந்த கொண்டாட்டமும் உற்சாகமும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். 

 

மும்பை அணி பெற்ற 5 வெற்றிகள்

 

இந்த லீக் தொடரில் முதலில் குஜராத் அணியை எதிர் கொண்ட மும்பை அணி, அந்த அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கி 5 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் குவித்தது.  இந்த போட்டியில் மட்டும் மும்பை அணி 31 பவுண்டரியும் 6 சிக்ஸர்களும் விளாசியது. அதன் பின்னர் களமிறங்கிய குஜராத் அணியை 64 ரன்களுக்குள் சுருட்டிய மும்பை அணி அந்த போட்டியை 143 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

 

அதன் பின்னர் பெங்களூரு அணியை எதிர்கொண்ட மும்பை அணி அந்த அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் களமிறங்கிய மும்பை அணி 14.2 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 159 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

 

மூன்றாவதாக பலமான டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதிய மும்பை அணி டெல்லி அணியை 18 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி, 105 ரன்களுக்குள் சுருட்டியது. 15 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 109 ரன்கள் எடுத்த மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது மும்பை அணியின் ஹாட்ரிக் வெற்றியாக பதிவானது. 

 

 நான்காவது போட்டியாக, உத்தர பிரதேச வாரியர்ஸ் அணியை எதிர் கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த வாரியர்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் சேர்த்தது. ஆனால் அந்த இலக்கை மும்பை அணி, 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது. இந்த போட்டியிலும் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

 

நேற்று நடந்த குஜராத் அணியுடனான போட்டியிலும், மும்பை அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

 

பேட்டிங் , பவுலிங் என கிரிக்கெட்டின் 360 டிகிரியிலும், மும்பை அணி வீராங்கனைகள் சுழன்று சுழன்று விளையாடி யாராலும் வீழ்த்த முடியாத அணியாக உருப்பெற்றதுடன்,   ப்ளேஆஃப்க்கும் தகுதி பெற்றுள்ளது.