உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை தோற்கடித்து பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. 27 ஆண்டுகளுக்கு பிறகு, முதல்முறையாக ஐசிசி கோப்பையை தன்வசமாக்கியுள்ளது. ஐசிசி தொடர்களின் லீக் போட்டிகளில் வெற்றிபெற்றாலும், நாக் அவுட் போட்டிகளில் தோல்வி அடைந்து வெளியேறி வந்த தென்னாப்பிரிக்கா அணி, தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Continues below advertisement


இரு அணிகளுக்கும் போட்டா போட்டி:


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெறப்போவது யார்? என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி கடந்த 11ஆம் தேதி, இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.


நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்த்து தென்னாப்பிரிக்க அணி களம் கண்டது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அவரது முடிவுக்கு நல்ல பலன் கிடைத்தது. மைதானம் பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால் ரபாடா, ஜான்சென், நிகிடி, முல்டர் ஆகிய நான்கு வேகப்பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசினர். இதனால், 56.4 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்டானது. 


மகுடம் சூடிய தென்னாப்பிரிக்கா:


ரபாடா அபாரமாக பந்துவீசி 15.4 ஓவர்களில் 51 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜான்சென் 3 விக்கெட்டுகளையும், மகாராஜ், மார்க்ரம் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து, முதல் இன்னிங்சில் தொடர்ந்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.


கேப்டன் பவுமா, பெடிங்கம் ஆகியோரை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு அவுட்டானார்கள். இதனால், 57.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்க அணி 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக பந்து வீசிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.


இதையடுத்து, 2ஆவது இன்னிங்சில் தொடர்ந்து பேட்டிங் ஆட வந்த ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் கவாஜா, கிரீன், ஸ்மித் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 


நீ ஜெயிச்சிட்ட பவுமா! 


கடைசியில் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் கேரி மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். பொறுமையாக ஆடிய மிட்செல் அரை சதம் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியில், 207 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 


இதனால், 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கியது தென்னாப்பிரிக்கா. ஆரம்பத்தில், ரிக்கல்டன் விக்கெட்டை இழந்தாலும் அதன் பிறகு பொறுமையாக ஆடியது. குறிப்பாக, தொடக்க வீரர் எய்டன் மார்க்ரம் சிறப்பாக ஆடினார். அவருடன் சேர்ந்து கேப்டன் பவுமா பொறுமையாக ஆடினார்.


சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் கடந்தனர். அபாரமாக ஆடிய மார்க்ரம் சதம் விளாசி அசத்தினார். இந்த ஜோடியை நேற்றைய நாள் முடிவில் 56 ஓவர்கள் வீசியும் ஆஸ்திரேலியாவால் பிரிக்க முடியவில்லை. இதனால், ஆட்டமும் நேற்றைய நாள் முடிவில் தென்னாப்பிரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்தது. 


நனவானது 27 ஆண்டுகால கனவு:


வெற்றி பெற வெறும் 69 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், 4ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த தென்னாப்பிரிக்காவுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. காலில் காயத்துடன் ஆடி வந்த கேப்டன் பவுமா, 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து, 136 ரன்கள் எடுத்திருந்தபோது, மார்க்ரமும் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த பெடிங்கம் பொறுப்பாக ஆடி, தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றியை தேடி தந்தார். இறுதியில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றியுள்ளது.


கடந்த பல ஆண்டுகளாக, பலமான அணியை வைத்திருந்தாலும் ஐசிசி தொடர்களின் லீக் போட்டிகளில் வெற்றிபெற்றி, நாக் அவுட் போட்டிகளில் தோல்வி அடைவதை வழக்கமாக கொண்டிருந்தது. கடைசியாக, கடந்த 1998ஆம் ஆண்டு, ஐசிசி நாக் அவுட் கோப்பையை (தற்போது சாம்பியன்ஸ் டிராபி என பெயர் மாற்றப்பட்டது) தென்னாப்பிரிக்க அணி வென்றது குறிப்பிடத்தக்கது.