உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடும் 3 போட்டிகளுக்கான டிக்கெட்கள் இன்று விற்பனைக்கு வருகிறது. 


சென்னை, டெல்லி மற்றும் புனேவில் நடைபெறவுள்ள இந்தியப் போட்டிகளுக்கான டிக்கெட்கள் ஆகஸ்ட் 31ம் தேதி (இன்று) இரவு 8 மணி முதல் விற்பனைக்கு வரும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. 


இந்த டிக்கெட்டுகள் அதிகாரப்பூர்வ டிக்கெட் tickets.cricketworldcup.com. என்ற இணையதளத்தில் கிடைக்கும். மேலும், புக் மை ஷோ இணையதளம் மூலமும் இன்று இரவு 8 மணி முதல் டிக்கெட் விற்பனை தொடங்கவுள்ளது. 


அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோத உள்ளது. அக்டோபர் 11-ம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. அக்டோபர் 19-ம் தேதி, புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் (எம்சிஏ) இந்தியா வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.


2023 உலகக் கோப்பைக்கான மற்ற இந்திய போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் விற்பனைக்கு வரும்.


செப்டம்பர் 1 ஆம் தேதி, தர்மசாலா, லக்னோ மற்றும் மும்பையில் நடைபெறும் இந்திய போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் நேரலையில் இருக்கும். செப்டம்பர் 2 ஆம் தேதி, பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் திட்டமிடப்பட்டுள்ள இந்தியப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனைக்கு வரும், அகமதாபாத்தில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 3 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 15ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. 


முன்னதாக, 2023 உலகக் கோப்பையில் இந்தியா அல்லாத போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ஆகஸ்ட் 24 அன்று (மாஸ்டர்கார்டு பயனர்களுக்கு) மற்றும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி பொது மக்களுக்காக தொடங்கப்பட்டன.


ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும்? 


ஒருநாள் உலகக் கோப்பை 2023 இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பையை மனதில் வைத்து, அனைத்து அணிகளும் தங்க வீரர்களின் மற்றும் செயல்திறனை கண்காணித்து வருகின்றன. 


தகவலின்படி, ஆசிய கோப்பை 2023  போட்டியில் குரூப் லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தானை செப்டம்பர் 2ம் தேதி எதிர்கொண்ட பிறகு, வருகின்ற செப்டம்பர் 3ம் தேதி உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


 கடந்த சில மாதங்களாகவே இந்திய அணி பல காயங்களுடன் தடுமாறி வந்தது. சமீபத்தில்தான் ஷ்ரேயாஸ் ஐயர், பும்ரா உள்ளிட்டோர் இந்திய அணிக்கு திரும்பினர். கே.எல். ராகுல் இன்னும் முழு உடற்தகுதி பெறவில்லை என்றும், அவர் ஆசியக் கோப்பையில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஆசியக்கோப்பை: இந்தியா - பாகிஸ்தான்


ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. அதேநேரம், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான இந்தப் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.