டிஎன்பிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற 8 அணிகளுக்கு இடையேயான போட்டி சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

டி.என்.பி.எல் தொடர்:

உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் வகையிலான நடப்பாண்டு டி.என்.பி.எல். தொடர், கடந்த ஜுன் மாதம் 12ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் 7 லீக் போட்டிகளில் விளையாடும். மொத்தம் 28 லீக் போட்டிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதில் 21 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்னும் 7 போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்காக, அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

டிஎன்பிஎல் புள்ளி பட்டியல்: 

எண் குழு போட்டி வெற்றி தோல்வி முடிவு இல்லை நிகர ரன் ரேட் புள்ளிகள்
1 லைகா கோவை கிங்ஸ் 6 5 1 0 +2.138 10
2 நெல்லை ராயல் கிங்ஸ் 5 4 1 0 +0.558 8
3 திண்டுக்கல் டிராகன்ஸ் 5 4 1 0 +0.513 8
4 Siechem மதுரை பாந்தர்ஸ் 5 3 2 0 -0.005 6
5 சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 2 4 0 +0.298 4
6 IDream திருப்பூர் தமிழர்கள் 5 2 3 0 -0.563 4
7 சேலம் ஸ்பார்டன்ஸ் 5 1 4 0 -1.693 2
8 பா11சி திருச்சி 5 0 5 0 -1.745 0

முந்தும் 3 அணிகள்:

இதுவரை நடந்து முடிந்த லீக் போட்டிகளின் அடிப்படையில் கோவை, நெல்லை, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளன. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள கோவ அணி, இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் சந்தித்துள்ளது.

இதனால், பிளே-ஆஃப் சுற்றுக்கு கோவை அணி செல்வது உறுதியாகிவிட்டது. அதற்கடுத்த இடத்தில் உள்ள நெல்லை மற்றும் திண்டுக்கல் ஆகிய அணிகள், தலா 5 போட்டிகளில் விளையாடி தலா 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளன. மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றாலும், அந்த அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்வது உறுதியாகிவிடும்.

நான்காவது இடத்திற்கு கடும் மோதல்:

ஐபிஎல் தொடரை போன்று டி.என்.பி.எல் தொடரிலும் இந்த முறை 4வது இடத்திற்கு தான் கடும்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் மதுரை அணி 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. தனக்கான இடத்தை உறுதி செய்ய மீதமுள்ள 2 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மதுரை அணி உள்ளது. 

அதேநேரம் சேப்பாக் அணி 4 புள்ளிகளை மட்டுமே பெற்று இருந்தாலும்,  ரன் ரேட்டில் நல்ல நிலையில் உள்ளது. இதனால், மீதமுள்ள ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும், டாப்-4க்குள் நுழைய லேசான வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே 2 வெற்றிகளை பெற்றுள்ள திருப்பூர் அணிக்கு இன்னும் இரண்டு லீக் போட்டிகள் மீதமுள்ளன. அந்த இரண்டிலும் வெற்றி பெற்றால், திருப்பூர் அணியும் பிளே-ஆஃப் சுற்றுக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

கடைசி 2 இடங்கள்:

நடப்பு தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சேலம் அணி வெறும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. மற்றொரு அணியான திருச்சி அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.